Tamilnadu
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 98ஆவது பிறந்தநாள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 98-வது பிறந்த நாளான, 1.10.2025 அன்று காலை 10.00 மணியளவில், சென்னை அடையாறு, தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் அவர்கள் 1.10.1928 அன்று பிறந்தார். “நடிப்பு தனது மூச்சு என்றும், நடிப்பு ஒன்றுதான் தனக்குத் தெரிந்த தொழில் என்றும், நடிப்புதான் எனக்குத் தெய்வம்” என்றும் சிவாஜி கணேசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
குழந்தைப் பருவம் முதற்கொண்டே நடிப்பதில் ஆர்வம் கொண்டு பல்வேறு நாடகங்களில் பங்கேற்று நடித்து வந்தார். பேரறிஞர் அண்ணா அவர்களால் எழுதப்பட்ட “சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்” என்கிற நாடகத்தில் சிவாஜியாக நடித்தார். அவரின் நடிப்புத் திறமையினைப் பாராட்டி தந்தை பெரியார் அவர்கள் “சிவாஜி கணேசன்” என்று பெயர் சூட்டினார்.
சிவாஜி கணேசன் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கதை வசனத்தில் உருவாகிய பராசக்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ்த் திரைப்பட உலகில் 300 மேற்பட்ட திரைப்படங்கள், 2 இந்தி படங்கள், 9 தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படம் ஆகியவற்றிலும் நடித்துப் புகழ்பெற்றார். பிரபலமானார்.
சிவாஜி கணேசன் அவர்கள் “நடிகர் திலகம்”, “நடிப்புச் சக்கரவர்த்தி” என்று மக்களாலும், திரை உலகத்தினராலும் அழைக்கப்பட்டார். இவர் நடித்த கப்பலோட்டியத் தமிழன், இராஜராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன் முதலிய பல வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்படங்கள் காண்போரின் மனதில் இன்றும் நிலைத்து நிற்கின்றன.
உலகம் முழுவதும் பாராட்டுகள் பெற்ற அற்புதக் கலைஞர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்புத் திறமையைப் பாராட்டி பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷண் விருது, செவாலியே விருது மற்றும் தாதா சாகிப் பால்கே விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 98-வது பிறந்த நாளான 1.10.2025 அன்று, அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
Also Read
-
பொறுப்பற்று பேசும் விஜய்! : மக்களின் துயரில் பங்கெடுக்காத இவர், யாருக்கான தலைவர்?
-
”துயரத்திலும் லாபம் தேடும் எடப்பாடி பழனிசாமி" : அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி!
-
”மரணங்களை வைத்து பா.ஜ.க நடத்தும் மலிவான அரசியல்” : மு.வீரபாண்டியன் ஆவேசம்!
-
”தொண்டர்களை தூண்டி விடும் விஜய் - மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” : பெ. சண்முகம் கடும் கண்டனம்!
-
தொடர் விடுமுறையை முன்னிட்டு 3,80,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் : நேரில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்!