Tamilnadu

கரூர் சம்பவம் : தொடர் அவதூறு பரப்பிய Youtuber ஃபெலிக்ஸ்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்!

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் கடந்த செப்.27-ம் தேதி கரூரில் ரசிகர்களை சந்திப்பதற்காக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட நேரத்தை கடந்து அவர் வருகை தந்ததால், அவரை பார்க்க ஏராளமானோர் முண்டியடித்தனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஏராளமானோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த நிலையில், இதுவரை 10 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டனர். தொடர்ந்து போர்க்கால நடவடிக்கை எடுக்கவும், இதுகுறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மேலும் நள்ளிரவே சம்பவ இடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்த நிலையில், உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் இந்திய அளவில் உலக அளவிலும் செய்தியாக மாறியதோடு சீனாவும் வருத்தம் தெரிவித்துள்ளது.

இந்த கோர சம்பவத்துக்கு விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதிமுக, பாஜக ஆதரவாளர்கள் விஜய் ரசிகர்களுடன் சேர்ந்து தமிழ்நாடு அரசு குறித்து அவதூறு பரப்பி வருகிறது. மேலும் விஜய், கரூரில் பேசுவதற்கு சுமார் 12 மணியளவில் நேரம் கேட்டிருந்த நிலையில், மாலை 7 மணியளவிலேயே கடும் கூட்டம் சேர்ந்த பிறகே பேசினார்.

அதோடு கூட்டம் அதிகளவில் இருப்பதாகவும், எனவே உள்ளே நுழையுமுன்பே இங்கே பேசுமாறும் போலீசார் அறிவுறுத்தியும், அதனை விஜய் மற்றும் நிர்வாகிகள் கேட்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக இணை செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன்தலைமறைவாக இருந்த நிலையில், நேற்று அவரை அதிரடியாக தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த தவெக நிர்வாகி பவுன்ராஜ் என்பவரையும் கரூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே இந்த சம்பவத்தில் அவதூறு பரப்பிய 25 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு, பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் சகாயம், மாங்காடு பகுதியை சேர்ந்த த.வெ.க பிரமுகர் சிவநேசன், ஆவடியைச் சேர்ந்த த.வெ.க பிரமுகர் சரத்குமார் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அந்த வகையில் தற்போது Youtuber Felix என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள Youtuber Felix, பல்வேறு விவகாரங்களில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி வந்தார். அண்மையில் கூட அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தொகுதியான திருவாரூரில்தான் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் கடைசி உள்ளதாக தவறான தகவல் வெளியிட்ட நிலையில், அதற்கும் பலரும் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அழுவது போல் நடித்த உத்தமரா இன்று அழுகையைப் பற்றிப் பேசுவது? : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிலடி!