Tamilnadu

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமாக உள்ளார்... 2 நாட்களில் பணிகளை மேற்கொள்வார் : அப்பல்லோ மருத்துவமனை !

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் வழக்கமான நடைப்பயிற்சியில் போது தலை சுற்றல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு இருந்தபடி அதிகாரிகளை அழைத்து அலுவல் பணிகளையும் முதலமைச்சர் மேற்கொண்டார். அவர் சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்புவார் என்று கூறப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்களில் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்வார்கள் என அப்பல்லோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சர் அவர்களுக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சினை தொடர்பாக க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில், இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.

இதய சிகிச்சை மருத்துவர் Dr.G.செங்குட்டுவேலு அவர்களின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. முதலமைச்சர் அவர்கள் நலமாக உள்ளார்கள். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார்கள்"என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: 1296 நாட்களுக்குப் பிறகு... இந்திய அணியில் சாதனை படைத்த சாய் சுதர்சன்... அவர் செய்த சாதனை என்ன ?