Tamilnadu

"தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது" - போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம் !

தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என வதந்திகள் பரப்பப்பட்டு வரும் நிலையில், பேருந்து கட்டணம் நிச்சயமாக உயர்த்தப்படாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். அரியலூரில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "பேருந்து கட்டணம் உயர்வு என்பது வதந்தியாக பரவுவது வழக்கமாக இருந்துவருகிறது. இதனை ஒவ்வொரு முறையும் மறுத்து வருகிறோம். பேருந்து கட்டண உயர்வு என்பது நிச்சயம் கிடையாது.

ஏழை எளிய மக்கள் மீது சுமை ஏற்றப்படக்கூடாது என்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருந்து கட்டணத்தை உயர்த்து சூழல் பலமுறை ஏற்பட்டபோதும் பேருந்து கட்டணத்தை ஏற்றக்கூடாது என்ற அறிவுரையை எங்களுக்கு வழங்கியிருக்கிறார். எனவே இப்போதும் தெளிவாக சொல்கிறேன், அரசு போக்குவரத்து கழகத்தை பொருத்தவரை பேருந்து கட்டணம் நிச்சயம் இருக்காது"என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "அதிமுகவிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, பாரதிய ஜனதாவின் கனவு என்ன என்பது அதிமுகவை முழுவதும் ஆக்கிரமித்து அந்த இடத்தை நிரப்புவது தான் என்று கூறியுள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று சொன்ன எடப்பாடிதான் அமித்ஷாவுடன் மேடையில் அமர்ந்திருக்க அவர் முழங்க வாய்பொத்தி கைகட்டி மௌனியாக அமர்ந்திருந்தார். இப்போது அவர் ஏதேதோ பேசுகிறார். இன்னும் சில நாட்கள் கழித்து என்ன பேசுகிறார் என்பதை காலம் பதில் சொல்லும்"என்று கூறினார்.

Also Read: தென்மாநிலங்களில் இரட்டிப்பான தனிநபர் வருமானம் - பின்தங்கிய வடமாநிலங்கள்: புள்ளி விவரங்கள் காட்டுவது என்ன?