தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் கடந்த பத்தாண்டுகளில் தனிநபர் வருமானம் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது என சமீபத்தில் வெளியான ஒன்றிய அரசு புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் அடிப்படையில், இந்தியாவின் ஒட்டுமொத்த தனிநபர் நிகர வருமானம் 2014-15 ஆம் ஆண்டில் ரூ.72,805 இலிருந்து 2024-25 ஆம் ஆண்டில் ரூ.1,14,710 ஆக (சுமார் 57.5% அதிகரிப்பு) வளர்ந்துள்ளது.
குறிப்பாக இந்த பட்டியலில் தென்மாநிலங்களான கர்நாடகா (93.6%), தெலுங்கானா (85.3%) மற்றும் தமிழ்நாடு (83.3%) ஆகியவை தரவரிசையில் முன்னிலை வகித்துள்ளன. கடந்த பத்தாண்டுகளில் அவற்றின் தனிநபர் வருமானம் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது.
அதே நேரம் கடந்த பத்தாண்டுகளில், உத்தரகண்ட், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை இந்தியாவில் தனிநபர் வருமானத்தில் மிகக் குறைந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக, புதிதாக வெளியிடப்பட்ட அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.
தனிநபர் வருமானம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு பிராந்தியத்தில் ஒரு நபர் சம்பாதிக்கும் சராசரி வருமானமாகும். இது பிராந்தியத்தின் மொத்த வருமானத்தை அதன் மக்கள்தொகையால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட உத்தரபிரதேசம் உட்பட்ட சில மாநிலங்கள் தொடர்பான தனிநபர் வருமான புள்ளிவிவரங்கள் வெளியிடப்படவில்லை.