Tamilnadu

பட்டாசு ஆலை வெடிவிபத்து - 8 பேர் உயிரிழப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல், நிதியுதவி!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (01.07.2025) காலை சுமார் 8.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், மீனம்பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம் (வயது 55) த/பெ.ராமசாமி, அனுப்பன்குளத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டியன் த/பெ.சின்னையா, மத்தியசேனையைச் சேர்ந்த லட்சுமி க/பெ.கருப்பசாமி, விருதுநகர் வட்டம், ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி (வயது 38) த/பெ.ராம்ராஜ், புண்ணியமூர்த்தி த/பெ.ராமையா, சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த ராமஜெயம் (வயது 27) த/பெ.கந்தசாமி, நாகபாண்டி த/பெ.முத்திருளன் மற்றும் சூலக்கரையை சேர்ந்த வைரமணி (வயது 32) த/பெ. காந்தி ஆகிய எட்டு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வரும் லிங்குசாமி (வயது 45), திரு.மணிகண்டன் (வயது 40), கருப்பசாமி (வயது 27), முருகலட்சுமி (வயது 48) மற்றும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அழகுராஜா (வயது 28) ஆகிய ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ”130 கோடி பேரை ரயில் பயணத்திலிருந்து வெளியேற்றியது பாஜக அரசு” : சு.வெங்கடேசன் MP கண்டனம்!