Tamilnadu

சென்னையில் ரூ.4 ஆயிரம் கோடி முதலீடு : 600 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பூங்கா அமைக்கும் WS Industries!

தமிழ்நாடு உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குவதோடு, அதிக தொழிற்சாலைகளுடன் இந்திய அளவில் முன்னணி மாநிலமாகவும் விளங்குகிறது.

தமிழ்நாட்டில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உலக தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளுடன் துறை சார்ந்த தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள், புத்தாக்கத் திட்டங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற புதிய திட்டங்களை பெருமளவில் ஈர்த்திட துறை சார்ந்த கொள்கை அறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்புகளை கொண்ட தமிழ்நாட்டில், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்து அதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும்படி அவர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடும், முதலீட்டாளர்கள் சந்திப்புகளும் நடத்தப்பட்டு, 9 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்.27 ஆம் தேதி அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அங்கு 25 முன்னணி நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் 19 நிறுவனங்களுடன் ரூ.7616 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 11,516 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படி தொழில்துறையில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பல முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்ள முன்வருகின்றன. மேலும் முதலீடு செய்து வரும் நிறுவனங்களும் தங்களுக்கு தொழிற்சாலைகளை விரிவுபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், சென்னை அருகே 600ஏக்கர் பரப்பளவில், 4ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் WS இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தொழிற்பூங்காவை அமைக்கிறது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் WS இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், தொழிற்சாலைகளுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், லாஜிஸ்டிக்ஸ் எனப்படும் சரக்கு போக்குவாரத்து, தரவு மையங்கள், மின்னணு திட்டம் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், இந்த நிறுவனம்,சென்னையை அடுத்துள்ள சுங்குவார்சத்திரத்தில் 600 ஏக்கர் பரப்பளவில், 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்பூங்காவை அமைக்க உள்ளது. ஃபாக்ஸ்கான் மற்றும் சாம்சங் ஆகிய பிரபல மின்னணு நிறுவனங்களுக்கு அருகே WS இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொழிற்பூங்கா அமைகிறது.

இந்திய நிறுவனங்களுக்கு ஏற்ற கட்டுமானங்கள், தரவு மையங்கள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி நிர்வகிக்கும் நோக்கில் WS இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய தொழிற்பூங்கா உருவாகிறது.

Also Read: 21 முதல்நிலை காவலர்களுக்கு தலைமை காவலர் பதவி நிலை உயர்வு! : ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!