Tamilnadu

நாளை நடைபெறுகிறது TNPSC குரூப்-1, குரூப் 1ஏ தேர்வு... தேர்வு மையங்கள் எத்தனை ? முழு விவரம் உள்ளே !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உதவி ஆட்சியர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்பட குரூப்-1 பணியிடங்களில் காலியாக உள்ள 70 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 44 மையங்களில் நாளை இதற்கான தேர்வு நடைபெறவுள்ளது. குரூப் 1 தேர்வை 2.27 லட்சம் பேரும், குரூப் 1ஏ தேர்வை 6,465 பேரும் எழுதுகின்றனர். சென்னையில் மட்டும் தேர்வெழுத 41,094 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகாக்கள் என மொத்தம் 44 இடங்களில் குரூப் 1, 1ஏ முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு தேர்வு கண்காணிப்பு பணியில் 987 பேர் ஈடுபடவுள்ளனர். காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதுவோர் தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால்டிக்கெட்டை தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும் தேர்வர்கள் தங்களது ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கொண்டு வர வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதோடு செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னனு சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருப்போர் கண்டறிந்தால், தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: AIR INDIA விமான விபத்து... கடமையில் இருந்து நழுவிய ஒன்றிய அரசு - முரசொலி விமர்சனம் !