Tamilnadu
”அகமதாபாத் விமான விபத்து பேரழிவு” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் AI171 லண்டனுக்கு நண்பகல் நேரத்தில் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, திடீரென குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.
அப்போது, வானுயரத்திற்கு தீப்பிழம்பு எழுந்தது.விபத்துக்குள்ளான விமானம் போயிங் நிறுவனத்தின் 787 டிரீம் லைனர் ரக விமானம் ஆகும். இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 242 பயணிகளும் உயிரிழந்துள்ளனர். இதில் 200 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் உடல்கள் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதால், பல வீடுகளும் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த முக்கியமான நேரத்தில், மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், படுகாயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ உதவியை உறுதி செய்யவும் ஒன்றிய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற பேரழிவு மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு விமான நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறையையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என சமூகவலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அதேபோல் கனிமொழி MP “விலைமதிப்பற்ற உயிர்களைப் பறித்த அகமதாபாத் விமான விபத்து சம்பவத்தால் ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என இரங்கல் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”டெல்லி அடிமை அதிமுக வரும் தேர்தலில் டெப்பாசிட் கூட வாங்கக்கூடாது!” :தூத்துக்குடியில் முதலமைச்சர் பேச்சு!
-
”பாஜக-வின் கொள்கை பொது சிவில் சட்டம்.. உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி”: முரசொலி கடும் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை வட்டமடிக்கும் பாஜக எனும் பருந்தை விரட்டியடிக்க வேண்டும்” : பரமக்குடியில் முதலமைச்சர் உரை!
-
“இனிவரும் 10 நாட்களும் மக்களோடு மக்களாக களப்பணி ஆற்ற வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
“NDA ஆட்சியில் நீதிக்கோ – நிர்வாகத்திற்கோ இடமே இருக்காது” : சிவகங்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!