Tamilnadu

“ராணுவ வீரர்கள் என்ன எல்லையில் சண்டையா போட்டர்கள், ஏன் பாராட்டுகிறீர்கள்?” -செல்லூர் ராஜு சர்ச்சை பேச்சு!

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா தொடர்ந்த Operation Sinthoor மூலம் பயங்கரவாதிகள் முகாமில் இருந்த 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதைதொடர்ந்து பாகிஸ்தானும் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. இப்படியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே தொடர் தாக்குதல் நடந்து வந்த நிலையில், இந்தியா முழுவதும் இந்திய இராணுவத்துக்கு ஆதரவு இருந்தது.

மேலும் எல்லையில் இருக்கும் மக்களையே தங்கள் உயிரைக் கொடுத்து பாதுகாக்கும் இராணுவ வீரர்களுக்கு இந்தியா முழுவதும் ஆதரவு எழுந்து வரும் நிலையில், மக்கள் பலரும் இராணுவத்துக்கு தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதோடு நேற்று (மே 10) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்திய இராணுவத்துக்கு ஆதாரவான பேரணியில், லட்சக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இந்த நிலையில் இராணுவத்துக்கு எதற்கு பாராட்டு? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை விளாங்குடி பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் விளாங்குடி பகுதிசெயலாளர் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு நீர்-மோர் பந்தல் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது : -

"இராணுவ வீரர்கள் எல்லையில் போய் என்ன சண்டையா போட்டார்கள்? அவர்களுக்கு தேவையான ஆயுதங்களை கேட்டு வாங்குவது ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷாவும், ராஜ்நாத் சிங்கும்; வாங்கி கொடுப்பது பிரதமர் மோடி. முதலில் பாராட்ட வேண்டியது இவர்களைதான். அதை விட்டுவிட்டு இராணுவ வீரர்களுக்கு ஏன் பாராட்டு தெரிவிக்கிறீர்கள்?" என்றார்.

செல்லூர் ராஜுவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு பலர் மத்தியிலும் கண்டனங்களும் எழுந்து வருகிறது.

Also Read: சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... 2004-ம் ஆண்டு ஏற்பட்டது போல் சுனாமி அச்சத்தில் மக்கள்!