Tamilnadu

“நடந்தை வாழி காவேரி திட்டம் விரைவில் தொடங்கப்படும்!” : அமைச்சர் துரைமுருகன் தகவல்!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், 2025 - 26 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்புடன், கடந்த மார்ச் 14ஆம் நாள் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 1) பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

விவாதம் நடைபெறுவதற்கு முன்னதான, வினா - விடை நேரத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “நடந்தை வாழி காவேரி திட்டத்தின் கீழ் காவேரி மற்றும் துணை ஆறுகளை தூய்மைப்படுத்தும் பணிகளுக்கான திட்ட மதிப்பீடுகள் முடிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு 60 விழுக்காடு நிதி ஒன்றிய அரசின் சார்பிலும், 40 விழுக்காடு நிதி மாநில அரசின் சார்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, திட்டத்தை தொடங்குவதற்கான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இப்பணி விரைவில் தொடங்கப்படும்.

காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத்திட்டம் முதன்முதலாக முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் 3 கட்டங்களாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு முதல்கட்டமாக 2,038 ஏக்கர் நிலம், இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

Also Read: ‘நமக்கு நாமே’ திட்டத்திற்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு! : சட்டப்பேரவையில், அமைச்சர் கே.என்.நேரு தகவல்!