Tamilnadu

இந்தியாவிலேயே முதல் முறை.. பழங்குடியினர்களுக்கு என பிரத்யேக அதிநவீன உயர் சிகிச்சையுடன் கூடிய மருத்துவமனை!

நீலகிரி மாவட்டம் உதகையில் சுமார் 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 700-படுக்கை வசதியுடன், 40 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள உதகை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையானது இந்தியாவில் சிம்லாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மலை பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியானது உதகை அரசு மருத்துவக் கல்லூரி என்பது தமிழ்நாட்டிற்கு பெருமையாகும்.

பழங்குடியினர் மக்கள் தனியாக சிகிச்சை பெறும் வகையில் 50 படுக்கை வசதியுடன் தனி அறைகள், அதிநவீன மருத்துவ கருவி வசதியுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியது வருமாறு :

இந்தியாவிலேயே பழங்குடியினர்களுக்கு என பிரத்யேகமாக அதிநவீன உயர்தர சிகிச்சை கருவிகளுடன் 700 படுக்கை வசதிகளுடன் மலைப்பிரதேசங்களில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட மருத்துவமனையாக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்காக வரும் ஏப்ரல் 6-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

இந்த மருத்துவமனையில் 10 அறுவை சிகிச்சை அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. திறமையான மருத்துவர் கொண்டு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். நீலகிரி மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனையாக கூடலூர் பகுதியில் மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நீலகிரியில் உள்ள மருத்துவமனை கட்டமைப்புகளை முழுமை பெறும் வகையில் புதிதாக 16 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் திறக்கப்பட உள்ளது. அதேபோல் நீலகிரியில் மருத்துவர்கள் காலி பணியிடங்களை 100% விரைவில் நிரப்பப்படும்.” என்றார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட திமுக பொறுப்பாளர் கே எம் ராஜு உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Also Read: புல்லட்டில் சென்று கஞ்சா விற்பனை... அதிமுக பிரமுகர் கைது... 1,100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார்!