Tamilnadu

”பொய் சொல்லக் கூடாது” : அமலாக்கத்துறைக்கு குட்டு வைத்த சென்னை உயர்நீதிமன்றம்!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை சோதனை நடத்தியது. பிறகு டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது. விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்த கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் தரப்பில் ஆஜ்ரான மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி, "சோதனை நடத்தும் போது, அதற்குரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். ஆனால் எந்த தகவலும் தெரிவிக்காமல் அலுவலகத்துக்குள் நுழைந்து அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி இருக்கிறார்கள். விசாரணை என்ற பெயரில் 60 மணி நேரம் பெண் அதிகாரிகள், உள்ளிட்டோரை சட்டவிரோதமாக அமலாக்க துறையினர் சிறை பிடித்துள்ளனர். இது தனிநபர் சுதந்திரத்துக்கு விரோதமானது” என வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், "இரவில் ஏன் சோதனை நடத்தப்பட்டது?" என அமலாக்கத் துறைக்கு கேள்வி எழுப்பினர். அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ”இரவில் சோதனை நடத்தப்படவில்லை” என்றார்.

உடனே குறுக்கிட்ட நீதிபதிகள், ”பொய் சொல்ல வேண்டாம். அனைத்தும் பத்திரிக்கைகளிலும் இது குறித்து செய்தி வெளியாகியுள்ளது. அமலாக்க துறை தனது அதிகாரத்தை செயல்படுத்திய விதத்தை தான் கேள்வி எழுப்புகிறோம்” என காட்டமாக கூறினர். பின்னர் இந்த வழக்கு விசாரணையை மார்ச் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும், அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Also Read: ”எனது பதிலுக்கு பயந்து கொண்டு வெளிநடப்பு செய்த அதிமுக” : பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!