Tamilnadu

”பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்” : சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு!

இந்தாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மார்ச் 14 ஆம் தேதி மீண்டும் கூட்டத் தொடர் தொடங்கியது.

அன்றைய தினம் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். பின்னர் இதற்கு அடுத்த நாள் மார்ச் 15 ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கியது. இதற்கு முன்னதாக வினா விடை நேரத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

அப்போது, வெண்கொடி அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு முன்வருமா? என உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், "வெண்குடியில் தடுப்பணை கட்ட வேண்டியது அவசியம் தான். ரூ.70 கோடியில் 1600 மீட்டர் நீளத்தில் தடுப்பணை அமைக்க திட்டம் அரசிடம் உள்ளது.

இந்த தடுப்பணை கட்டினால் 12 கிராம ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் உயரும். 2400 ஏக்கர் விவசாய நிலம் பயனடையும்” என தெரிவித்தார்.

அதேபோல், ”தமிழ்நாடு முழுவதும் உள்ள நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிக்காக இந்த ஆண்டு ரூ.950 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும்.”சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.

Also Read: ”ஒவ்வொரு ஊருக்கும் ஒரு திட்டம்” : நிதிநிலை அறிக்கைக்கு பொருளாதார நிபுணர் ஆனந்த சீனுவாசன் பாராட்டு!