Tamilnadu

பெண்களுக்குரிய பொற்கால ஆட்சியை நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். - அமைச்சர் கீதா ஜீவன் !

தமிழ்நாடு அரசு சார்பில் உலக மகளிர் நாளையொட்டி சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரை பகுதியில் உள்ள தமிழ் மூதாட்டி ஔவையார் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா, மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி, தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளருமான விஜயா தாயன்பன் உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்...

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், " அனைத்து பெண்களுக்கும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள். பெண்களுக்கு சொத்துரிமை,வேலைவாய்ப்பு, மகளிர் சுய உதவி குழுக்கள், பெண் காவலர்கள் என்று பெண்களின் உரிமைக்காக அடித்தளமிட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், நான் முதல்வன் திட்டம் என்று பெண்களுக்குரிய பொற்கால ஆட்சியை நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதில் பயன் அடைந்தவர்கள் மட்டுமல்லாமல் பெண்கள் அனைவரும் உரிமையை நிலைநாட்டி சோதனைகளை சாதனைகள் ஆக்குவோம். இன்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். சென்னை மாநகரில் பெண்களால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக பிங்க் ஆட்டோ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. முதலில் சென்னையில் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. படிப்படியாக அடுத்து விரிவாக்கப்படும்.

பாலியல் விவகாரத்தில் காவல்துறை, சமூக நலத்துறை, கல்வித்துறை இணைந்து எல்லார் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி புகார் தர முன் வாருங்கள் என்று தெரிவித்து வருகிறோம். கண்டிப்பாக புகார் தர முன் வாருங்கள். குழந்தைகளும், பெண்களும் புகார் கொடுக்க முன் வருகிறார்கள். என்றோ நடந்த குற்றங்கள் கூட இப்போது வெளி வருகிறது. குற்றங்கள் அனைத்தும் வெளியில் வர இன்று உள்ள ஊடகத்துறையின் வளர்ச்சி தான் காரணம்.முதல்வர் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது" என்று கூறினார்.

Also Read: அமெரிக்காவில் சாதிய நிகழ்ச்சியை நடத்திய குஜராத் அமைப்பு - அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கடும் கண்டனம் !