Tamilnadu
"சாரணர் இயக்கத்திலும் தமிழ்நாட்டின் பங்கே அதிகம்" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை !
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், "இது மணப்பாறையா இல்லை, பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் மாணவர் பாசறையா என்று சந்தேகப்படும் அளவுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் அமைச்சர் தம்பி அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை நான் பாராட்டுகிறேன்! தம்பி மகேஸை, சிறு வயதில் இருந்தே நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். மன்னிக்கவும். குழந்தையிலிருந்தே நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இப்போது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக, இலட்சக்கணக்கான மாணவர்களை, இளைஞர்களை கல்வியாலும், அறிவாற்றலாலும் முன்னேற வைத்து, அவர்கள் வளருவதை பார்த்து மகிழ்ச்சியடைகிறார்! அவருடைய பொறுப்பில், பள்ளிக்கல்வித் துறை செய்துவரும் திட்டங்களையும் சாதனைகளையும் சொல்வதற்கு இந்த ஒரு நிகழ்ச்சி போதாது! எனவே, சிலவற்றை மட்டும் நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்.
கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை நீக்க, நாம் கொண்டுவந்த இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை சிறப்பாக நடத்திக் காட்டினார். அந்த முன்னெடுப்புகளால், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கிறது! இந்த திட்டம் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையிலும் பாராட்டுகளை பெற்றிருக்கிறது.
அதுமட்டுமல்ல. கற்றல் மற்றும் பயிற்றுவித்தலை எளிமையாக்க நவீனமாக்க, 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கை கணினிகளை வழங்கியிருக்கிறார். 22 ஆயிரத்து 931 ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைத்திருக்கிறார்.எட்டாயிரத்து 209 High-Tech Lab-கள் அமைத்திருக்கிறார். மாணவர்களின் திறமைகளை அடையாளம்காட்ட, கலைத் திருவிழா, பன்னாட்டு புத்தக திருவிழா, மாவட்டந்தோறும் புத்தக திருவிழாக்களை நடத்தியிருக்கிறார்.
போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வெளியுலக அனுபவம் கிடைக்க வெளிநாடு பயணங்கள் என அவர் செய்துவரும் பணிகளை சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி, தம்பி அன்பில் மகேஸின் வளர்ச்சியைப் பார்க்க, அவருடைய அப்பா என்னுடைய ஆருயிர் நண்பன் அன்பில் பொய்யாமொழி இல்லையே என்ற வருத்தம் எனக்கு ஒருபக்கம் இருந்தாலும், பொய்யாமொழி இடத்திலிருந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் சொன்ன சாதனைகளின் மணிமகுடமாகதான் இப்போது, சாரண சாரணியர் இயக்கத்தின் வைரவிழா நிகழ்வு நடைபெறுகிறது. ஜம்போரி எனப்படும் பெருந்திரள் அணியாக நடைபெற்று வருகிறது. இன்னும் சிறப்பாக, தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவாகவும் இணைத்து நடத்தப்படுகிறது. இன்றைக்கு பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாட்டிற்கே பெரும் புகழை ஈட்டித் தருகிறது. இந்தப் புகழ், இந்தியப் புகழ்! இன்னும் சொன்னால், உலகப் புகழ்! சாரண சாரணியர் இயக்கம், உலக அளவிலான இளைஞர்களின் இயக்கங்களில் ஒன்றாகவும், உலக பேரியக்கங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. இந்தியா முழுவதும், 80 இலட்சம் மாணவர்கள் இந்த இயக்கத்தில் இருக்கிறார்கள். இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவங்களின் எண்ணிக்கை மட்டும் 12 இலட்சம் மாணவர்கள்! எட்டில் ஒரு பங்கு நாம் இருக்கிறோம்.
எதுவாக இருந்தாலும், தமிழ்நாட்டின் பங்கு என்பது, எப்போதும் அதிகமாக தான் இருக்கும் என்பதை சாரணர் இயக்கத்திலும் உண்மை ஆக்கியிருக்கிறோம்! நீங்கள் பங்கு பெற்றிருக்கும் சாரணர் இயக்கம் என்பது, உடலினை உறுதிசெய்யும் இயக்கமாக, உள்ளத்தை உறுதிசெய்யும் இயக்கமாக, ஒழுக்கத்தை உருவாக்கும் இயக்கமாக, ஒழுங்கை உருவாக்கும் இயக்கமாக இருக்கிறது! உங்கள் எல்லோரையும் இந்த சீருடையில் பார்க்கும்போது என்னுடைய உள்ளம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! ஏன் என்றால், நாளைய குடிமக்களான இளைய தலைமுறையிடம் சமூக சேவை செய்தல், உற்றுநோக்குதல், அறிவுத்திறனை வளர்த்தல் போன்ற பல்வேறு திறன் வளர்ப்பிலும் இந்த இயக்கம் கவனம் செலுத்துகிறது.
இந்த நேரத்தில் நான் உங்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புவது, நாட்டுப் பற்று என்பது, நிலத்தின் மீதான பற்று என்பதை கடந்து, மக்கள் மீதான பற்றாக வளரவேண்டும்! மக்கள் மீதான பற்றுதான் உண்மையான நாட்டுப் பற்று! இப்படி, இளைய தலைமுறைய இனிய தலைமுறையாக இந்த சாரணர் இயக்கம் மாற்றுகிறது! இராணுவ கட்டுக்கோப்பு இளைய தலைமுறையினரிடம் வளரவேண்டும் என்ற நோக்கத்தோடு தான், இராணுவ வீரரான பேடன் பவல், இந்த இயக்கத்தை உருவாக்கினார். சாரண, சாரணியர் இயக்கத்தின் இந்த பெருந்திரளணி, ஒவ்வொரு நாட்டிலும், நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்தியாவில் இதுவரைக்கும் 18 பெருந்திரளணிகளும், 5 சிறப்பு பெருந்திரளணிகளும் நடந்திருக்கிறது.
2000-ஆவது ஆண்டில் தமிழ்நாட்டில் சாரண சாரணியர் இயக்கப் பொன் விழா பெருந்திரளணி நடந்தபோது, தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் அன்றைக்கு அதை நடத்திக்காட்டினார். இப்போது வைரவிழா கொண்டாடும்போது நான் முதலமைச்சராக இருக்கிறேன். தலைவர் கலைஞர்தான், இந்த நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி! தமிழ்நாட்டில் ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களை உருவாக்கியது அவர்தான். எனவே, அவரது நூற்றாண்டு விழாவை நீங்கள் கொண்டாடுவது பொருத்தமானதுதான்!
நாம் எல்லோரும் சமத்துவத்துடனும், சகோதரத்துவ உணர்வோடும் ஒன்றிணைந்து இந்தியர் என்ற பெருமிதத்தோடு, ஒற்றுமையுடன் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம். அந்த வகையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான குழந்தைகள் ஒற்றுமையாக ஒரே இடத்தில் ஒன்றுகூடி, தங்களின் பண்பாட்டை பகிர்ந்துகொள்ளவும், வளர்த்து கொள்ளவும், அன்பை மேம்படுத்திடவும் மாபெரும் இந்த பெருந்திரளணி நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கிறது!
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”-என்று கணியன் பூங்குன்றனார் அவருடைய முதுமொழிக்கேற்ப சவுதி அரேபியா, மலேசியா, இலங்கை, நேபாளம் மற்றும் இந்தியாவை சேர்ந்த பல மாநிலங்கள் ஒருங்கிணைந்து கடந்த 6 நாட்களாக ஒரே குடும்பமாக இருப்பது தான் நம்முடைய அன்பின் வலிமை. இந்த விழாவுக்கு வருகை தந்துள்ள வெளி மாநிலத்தவர், வெளிநாட்டினர் தமிழ்நாட்டின் பெருமைகளையும், பண்பாட்டையும் பற்றி தெரிந்துக்கொண்டு இருப்பீர்கள். அதேபோல் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர்களின் பெருமைகளையும், பண்பாட்டையும் நம்முடைய மாணவ மாணவியர்கள் தெரிந்துக்கொண்டு இருப்பீர்கள்.
நம்முடைய திராவிட மாடல் அரசால், இந்த விழாவை வெகு சிறப்பாக கொண்டாடும் வகையில் பெருந்திரளணி சபை, திட்டக்குழு, தொழில்நுட்பக்குழு, செயல்பாட்டுக் குழுக்கள் உள்ளிட்ட 33 துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பாரத சாரண, சாரணியர் இயக்க வைரவிழாவில் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த
20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாரண, சாரணியர்கள் கலந்துக்கொண்டு தங்களின் பண்பாடு குறித்த செயல்பாடுகளை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிக்காக சாரணர்கள் தங்குவதற்கு ஆயிரம் கூடாரங்கள், சாரணியர்கள் தங்குவதற்கு 900 கூடாரங்கள், திரிசாரண சாரணியர்கள் தங்குவதற்கு 450 கூடாரங்கள், ஒன்றிய மற்றும் மாநில அரசு அலுவலர்கள் தங்குவதற்கு 40 கூடாரங்கள், அலுவலகப் பணிகளுக்காக 32 கூடாரங்கள் என்று மொத்தம் 2 ஆயிரத்து 422-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வில் பங்கேற்கும் சாரண, சாரணியர்கள் எல்லோருக்கும் உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சிறப்பான முறையில் தமிழ்நாடு அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
நிகழ்ச்சி நடக்கும் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் மருத்துவ சேவை வழங்கும் வகையில் 25 படுக்கை வசதிகளுடன் கூடிய இரண்டு மருத்துவ கூடாரங்கள் மற்றும் 15 நடமாடும் மருத்துவ வாகனங்கள், அவசர உதவிக்காக 15-க்கும் மேற்பட்ட அவசர சேவை ஊர்திகளும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்து தரப்பட்டிருக்கிறது.
கடந்த 28-ஆம் தேதி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி அவர்களால் பெருந்திரள் பேரணி தொடக்கி வைக்கப்பட்டது. சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் நூற்றாண்டு வரலாற்று விளக்க கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டு அதை பல்லாயிரக் கணக்கானோர் பார்வையிட்டு இருக்கிறீர்கள். இங்கு நடைபெற்ற Global Village அரங்கம் எல்லோரையும் ஈர்த்ததாக கேள்விப்பட்டேன்.
பண்பாட்டை அறிமுகம் செய்யும் அரங்கமாகவும், ஐ.நா. அவை சொல்லும் இலக்குகளை கற்பிக்கும் அரங்கமாகவும் இது அமைந்திருக்கிறது. அண்மையில் வெளியான நிதி ஆயோக்
அறிக்கைப்படி 17 இலக்குகளிலும் இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாடுதான் முன்னிலையில் இருக்கிறது!
தொடக்க விழாவில் ஒரே இடத்தில் சாரண சாரணியர் இயக்க இறைவணக்கப் பாடல் நிகழ்வில் அதிக நபர்கள் பங்கேற்றது, ஒரே இடத்தில் சாரண சாரணியர் இயக்கத்தினர் சாரண வணக்கம் தெரிவித்தது என்று
5 பெரும் சாதனைகளை அங்கீகரித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, சாரணசாரணியர் இயக்ககம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்திற்கு 5 உலக சாதனை விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை.
இந்த பெருந்திரளணி விழாவை சிறப்பாக நடத்த ஏதுவாக, 10 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் தலைமையில் 389 பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள், 700 காவல்துறை அலுவலர்கள், 450 மருத்துவத் துறை அலுவலர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இதர துறை பணியாளர்கள்-என்று மொத்தம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஒருங்கிணைந்து வெற்றிகரமாகவும், பாதுகாப்பான முறையிலும் இந்த விழாவை நடத்தி இருக்கிறார்கள். இதற்காக அர்ப்பணிப்போடு பணியாற்றிய அனைத்து துறை அலுவலர்களுக்கும், பாரத சாரண சாரணியர் இயக்கத்தை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், அங்கு உள்ளவர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது போன்று அறிவிப்பை நான் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து பல்லாயிரம் மாணவர்கள் கூடியிருக்கும் இந்த இடத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.
நம்முடைய பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அதிக எண்ணிக்கையில் சாரணர் இயக்கத்தில் சேர்க்கும் வகையில் மேலும் பல ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக, தமிழ்நாடு சாரண இயக்கத்திற்கான புதிய தலைமை அலுவலகம் நவீன பயிற்சி வசதிகளோடு 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
உடல் உறுதி, உள்ள உறுதி, ஒழுக்கம், வாய்மை இவற்றோடு அனைவரும் சமம் என்ற பண்பாட்டையும் கற்று அதை கடைபிடிப்பவர்களாக நீங்கள் எல்லோரும் செயல்படவேண்டும்! இந்திய நாடு பெற்ற விடுதலை என்பது ஒற்றுமையால் பெற்றது! கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நாம் எல்லோரும் சமம் என்ற உணர்வோடு ஒற்றுமையாக போராடியதால்தான் இந்திய நாடு விடுதலை பெற்றது. அந்த ஒற்றுமை உணர்வை நாம் எப்போதும் விட்டுவிடக் கூடாது.
இங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வந்திருக்கிறீர்கள். மானுடத் தத்துவத்தால் நாம் எல்லோரும் மனிதர்கள் என்ற பரந்த உள்ளமும் நமக்கு இருந்தாகவேண்டும். கூடாரங்கள் தனித்தனியாக இருக்கட்டும் ஆனால் உள்ளம் ஒன்றாக இருக்கட்டும் என்று சொல்வார்கள். அப்படி, எங்கிருந்தோ இங்கு வந்து ஒன்றாக தங்கிய நீங்கள் எல்லோரும் இங்கிருந்து பிரிந்து சென்றாலும் உள்ளத்தால் ஒருவர் என்ற உணர்வோடு செல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்த சிறப்பான பிரமாண்டமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, பொறுப்பாக, அக்கறையாக நடத்திக் காட்டிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கும், அவருக்கு துணையாக இருந்த அதிகாரிகள் எல்லோருக்கும் மீண்டும் நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
I thank all scout students from various states and countries for joining this Jamboree. Wishing you a wonderful experience and lasting friendships ahead!
பல மாநிலங்களிலிருந்து வந்திருக்கும் மாணவர்களுக்கு, உங்கள் தாய்மொழியில் நன்றி சொல்கிறேன்...
தன்யவாதாலு! தன்யவாதகளு! நன்னி!
தொன்னோபாத்! ஆபார்! தன்ன்வாத்!
தன்யபாத்! ஷுக்ரியா! துக்ச்சே!
ஷுக்ரன்! தெரிமா காசெ! ஸ்தூத்தி!
எல்லோருக்கும் நன்றி! நன்றி! நன்றி! என்று கூறி விடைபெறுகிறேன்" என்று கூறினார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!