Tamilnadu
தேசப்பிதாவின் இறப்பைக் கொண்டாடியது யார்? : ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, செல்வப்பெருந்தகை கேள்வி!
”எந்த சித்தாந்தம் உடையவர்கள் தேசப்பிதாவின் இறப்பைக் கூட கொண்டாடினார்கள் என்று ஆளுநர் சொல்லுவாரா?” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான இடங்களின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும். கிண்டியில் 27 ஜனவரி 1956 அன்று ராஜரத்தினம் நாதஸ்வரம் வாசிக்க, சுப்புலக்ஷ்மி ரகுபதி ராகவ பஜனை செய்ய, அப்போதைய மதராஸ் முதல்வர். ராஜகோபாலாச்சாரி அவர்களால் காந்தி நினைவகம் திறக்கப்பட்டது. அதுவே பின் நாளில் மக்களால் காந்தி மண்டபம் என அழைக்கப்பட்டு பெயரானது.
ஆளுநர், ஆட்சியாளர்கள் தான் சொல்வதை கேட்டே ஆகவேண்டும் என்னும் மனநிலையில் இருந்து விலகவேண்டும். காந்தியடிகளின் நினைவுதினம், ஒவ்வொரு வருடமும் எக்மோர் அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அனுஷ்டிக்கப்படுகிறது. இதே ஆளுநர் கடந்த 2023 வருடம் முதல்வருடன் காந்தியடிகளின் நினைவுதினத்தில் மரியாதை செலுத்தினார்.
காந்தியின் இறுதிக்காலத்தில் அவரது தனிச்செயலாளராக இருந்த தியாரே லால் நய்யார் தாம் எழுதிய 'மகாத்மா காந்தி கடைசிக் கட்டம்' என்ற நூலில் வெள்ளிக்கிழமையன்று நல்ல செய்தி வரும். எனவே ரேடியோவை தொடர்ந்து கேட்கவும் என்று ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் சில இடங்களில் ஏற்கெனவே கூறியிருந்தார்கள். அது மட்டுமல்ல, காந்தி கொல்லப்பட்ட செய்தி வெளியானதும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் பல இடங்களில் இனிப்புகளை விநியோகித்து கொண்டாடினார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். எந்த சித்தாந்தம் உடையவர்கள் தேசப்பிதாவின் இறப்பைக் கூட கொண்டாடினார்கள் என்று ஆளுநர் சொல்லுவாரா?
'தசரா விழாவின் போது அரக்கனான ராவணனை எரிப்பதுபோல, இனிமேல் காந்தி கொல்லப்பட்டதை ஒவ்வொரு வருடமும் இப்படித்தான் சுட்டு கொண்டாடப் போகிறோம்' என ஊடகங்களிடம் பகிரங்கமாக சொன்னேரே புஜா சகுன் பாண்டே, அவர் எந்த கொள்கையை அடிப்படையாகக் கொண்டவர் என்று ஆளுநர் சொல்லுவாரா?
தந்தை பெரியார் அவர்கள், காந்தி கொடியவன் கோட்சேவால் சுடப்பட்டு இறந்தவுடன், இந்த தேசத்திற்கு காந்தி தேசம் என்று பெரியடப்படவேண்டும் என்று கூறியதை ஆளுநருக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!
-
5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள்…அனைத்து தரப்பினருக்குமானது திராவிட மாடல் ஆட்சி: துணை முதலமைச்சர் பேச்சு!
-
சாலைப் பயணத்திற்கு இனி கவலை இல்லை… ரூ.1,843.85 கோடி செலவில் 11 சாலைகள்: திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
ரூ.211.90 கோடியில் 45 முடிவுற்ற, ரூ.53.76 கோடியில் 9 புதிய திட்டப் பணிகள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!