Tamilnadu

”34,986.28 ஏக்கர் நிலங்களை மீட்க வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நீலகிரி மாவட்டத்தில், கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டங்களில் ஜென்மம் நில உடைமை முறை குறித்து வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசு 1969 ஆம் ஆண்டு ஜென்மம் எஸ்டேட் (ஒழிப்பு மற்றும் இரயத்துவாரி மாற்றம்) சட்டத்தில் பிரிவு 17 நிலங்கள் தொடர்பான நீதிமன்ற வழக்குகள் மற்றும் நிலவரித் திட்ட பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு 1969 ஆம் ஆண்டு ஜென்மம் எஸ்டேட் (ஒழிப்பு மற்றும் இரயத்துவாரி மாற்றம்) சட்டத்தின் அடிப்படையில் குத்தகை காலம் முடிந்த 34,986.28 ஏக்கர் நிலங்களை மீட்கும் நடவடிக்கையை தொடரவும், மேற்கண்ட சட்டப்பிரிவு 17 நிலங்களில் நீண்ட காலமாக வசித்து வரும் மக்களுக்கு அடிப்படை தேவைகள் மற்றும் வசதிகளை நிறைவேற்றும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

மேலும், கூடலூர் ஜென்மம் நிலங்களில் தகுதியான குடியிருப்பு பகுதிகளுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றிட உள்ள தடையாணையை நீக்கும் பொருட்டு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யவும், நீதிப்பேராணை மனு எண்.202/1995-இல் விவாதிக்கப்படும் வனப்பிரச்சனைகளிலிருந்து தமிழ்நாடு கூடலூர் ஜென்மம் நிலங்கள் சட்டம் 1969-இன் கீழ் வரும் வழக்குகளை பிரித்து தனியாக விசாரணை செய்ய உச்ச நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெறுவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Also Read: தேசப்பிதாவின் இறப்பைக் கொண்டாடியது யார்? : ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, செல்வப்பெருந்தகை கேள்வி!