Tamilnadu

”ச்ச்ச்சீமானே... மன்னிப்பு கேள்” : சீமானுக்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை தரக்கறைவாக தொடர்ந்து பேசி வருகிறார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தனியார் ஊடகத்தின் பெண் செய்தியாளர், பிரபாகரனின் அண்ணன் மகன் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்வியால் ஆவேசமடைந்த சீமான், உரிய பதில் அளிக்காமல், அநாகரிகமாக பதிலளித்துள்ளார். இதற்குபத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும், கண்ணியக் குறைவான வார்த்தைகளை தொடர்ந்து பயன்படுத்தி வரும் சீமானுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

”ஊடகங்களில் உரையாடும் எளிய மனிதர்களே நாகரிகமான சொற்களை பயன்படுத்தும்போது, ஒரு கட்சித்தலைவரான சீமான் பொது இடங்களில் ஊடக சந்திப்புகளிலும் தொடர்ந்து ஆபாச மற்றும் இழி சொற்களை பயன்படுத்திவருவது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது” என சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டித்துள்ளது.

அதேபோல், ”பொது வாழ்க்கைக்கு வந்து ஆண்டுகள் பல கழிந்தும் பொதுவெளியில் பெண்கள் மத்தியில் நாகரீகமாக பேசத் தெரியாத ச்ச்ச்சீமானே..” என கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றம் வன்மையான கண்டனங்களை பதிவு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, "பத்திரிகையாளர்களை தொடர்ந்து நீ, வா, போ என்று தரக்குறைவாக சீமான் பேசி வருகிறார். பெண் பத்திரிகையாளரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது தவறான நடைமுறை மட்டுமல்ல மிகவும் கண்டிக்கத்தக்கது. சீமான் என்பவர் ஊடகத்தின் மூலமாகவே மக்களுக்கு தெரியப்படுகிறார். இந்த ஊடகத்தையே கேவலமாக பேசுவது அருவருக்கத்தக்கது. தொடர்ந்து அநாகரிகமாக பேசிவரும் சீமான் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்." என ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Also Read: ”மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசனுக்கு திருவுருவச் சிலை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!