Tamilnadu
”எனக்கு Energy கொடுக்கும் தொகுதி கொளத்தூர்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பேச்சு!
இன்று (11-01-2025) கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற பொங்கல் திருநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:-
எத்தனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், என் கொளத்தூர் தொகுதியில் எனது மக்களுடன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி எனக்கு எப்போதுமே ’ஸ்பெஷல்’! அதுவும் அது பொங்கல் விழா என்றால், அது எவ்வளவு ஸ்பெஷல் எனச் சொல்லவா வேண்டும்! ஒரு வாரமாகச் சட்டமன்றக் கூட்டத்தொடர், அதில் பரபரப்பான பல நிகழ்வுகள் என்று எல்லாவற்றையும் முடித்துவிட்டு நேராக இங்கேதான் வந்திருக்கிறேன்.
எனக்கு ’எனர்ஜி’ வேண்டுமென்றாலும் நீங்கள்தான், கொஞ்சம் ’ரிலாக்ஸ்’ ஆகவேண்டும் என்றாலும் கொளத்தூர்தான். அதுவும் தமிழர்களின் தனிப்பெரும் விழாவான பொங்கல் திருநாளை உங்களுடன் சேர்ந்து கொண்டாடுவதை விட வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்!
பொங்கலையும் தி.மு.க.வையும் பிரிக்க முடியாது. திராவிட இயக்கம் மிக உற்சாகத்தோடு கொண்டாடும் ஒரு திருநாள் என்றால் அது பொங்கல் திருநாள்தான். ஏனென்றால், இதில் மதம் இல்லை! சாதி இல்லை! வன்முறை இல்லை! உழைப்பைப் போற்றும் தத்துவம்தான் இருக்கிறது. சமத்துவம் இருக்கிறது! தமிழர்களின் பண்பாடும், வீரமும், கொண்டாட்டமும் நிறைந்த விழா பொங்கல் விழா!
தந்தை பெரியாரே சொல்லியிருக்கிறார். "தமிழர்களுக்கென்று ஒரு விழா என்றால் அது பொங்கல்தான்" என்று சொன்னவர் பெரியார். அதுவும் ஒரு பொங்கல் வாழ்த்துச் செய்தியில், "திருக்குறளை உங்களுக்குப் பொங்கல் பரிசாகத் தருகிறேன்" என்று சொன்னார் பெரியார். திராவிடநாடு, முரசொலி என நம் இயக்க இதழ்கள் எல்லாம் பொங்கலுக்குத்தான் ‘சிறப்புமலர்’ கொண்டு வருவார்கள்.
தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சரானதும், தை பிறப்பில் இருந்து திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கு தொடக்கம், பொங்கல் இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாளாக அறிவிப்பு எனப் பொங்கலைச் சிறப்பிக்கப் பல முயற்சிகளை எடுத்தார்.
இந்த ஆண்டு, பொங்கல் திருநாளைத் தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் சிறப்பாக - சொந்த ஊர்களில் குடும்பத்தோடும் நண்பர்களோடும் ஒன்றாகச் சேர்ந்து எழுச்சியோடு கொண்டாட வேண்டும் என 17-ஆம் தேதி ஒரு நாள் கூடுதலாக விடுமுறையும் விட உத்தரவிட்டுக் கையெழுத்திட்ட கைதான் இந்தக் கை. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!