Tamilnadu

நேரு குறித்த சர்ச்சை பேச்சு.. கைது செய்ய எழுந்த கோரிக்கை.. மன்னிப்பு கேட்ட Standup Comedian பரத் பாலாஜி!

அண்மைக்காலமாக STANDUP COMEDY ட்ரெண்டாகி வருகிறது. இதில் ஒருவர் நின்றுகொண்டே மக்கள் மத்தியில் காமெடி செய்து மகிழ்விப்பார். அப்படி ஒரு Standup காமெடியன்தான் பரத் பாலாஜி என்ற இளைஞர்.

பரத் பாலாஜி அண்மையில் தனது Standup காமெடி ஷோவில் இந்தியாவின் முதல் பிரதமரான மறைந்த ஜவஹர்லால் நேரு குறித்தும், இந்திய சுதந்திர போராட்டம் குறித்தும் மிகவும் அருவருக்கத்தக்க முறையில் அவதூறான கருத்துகளை பேசியிருந்தார்.

காமெடி என்ற பெயரில் தனிமனித தாக்குதல், அதுவும் மறைந்த முன்னாள் பிரதமர் நேரு மீதான அவதூறு கருத்துகள் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனங்கள் குவிந்தது. இதைத்தொடர்ந்து பரத் பாலாஜியை கைது செய்ய வேண்டும் பலரும் வலியுறுத்திய நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன், பரத் பாலாஜியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலிறுத்தினார்.

தொடர்ந்து கண்டனங்களும், விமர்சனங்களும் பரத் பாலாஜிக்கு எழுந்த நிலையில், தற்போது வீடியோ வெளியிட்டு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து STANDUP காமெடியன் பரத் பாலாஜி வெளியிட்டுள்ள மன்னிப்பு வீடியோவில், “நான் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ, பலரது உணர்வுகளை காயப்படுத்தியிருப்பதை உணர்ந்துள்ளேன்... அந்த வீடியோவை உடனடியாக நீக்கிவிட்டேன்.. பண்டிதர் ஜவஹர்லால் நேரு குறித்து நான் மிகவும் மதிப்பும் மரியாதை வைத்துள்ளேன்.

நான் இப்படி பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. இனி வரும் காலத்தில் இப்படி நடந்து கொள்ள மாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்” என்று பேசியுள்ளார். எனினும் பரத் பாலாஜியின் அருவருக்கத்தக்க பேச்சு தற்போதும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.

Also Read: "பிற மாநில முதலமைச்சர்களுக்கு எடுத்துக்காட்டாக நமது முதலமைச்சர் இருக்கிறார்" - வைகோ புகழாரம் !