Tamilnadu

நாளை முதல் சென்னை புத்தகக் கண்காட்சி! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

சென்னையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிக்கு, தமிழ்நாட்டளவில் பெரும் திரளான மக்கள் வருகை தந்து, லட்சக்கணக்கான புத்தகங்களை வாங்கி செல்வது வழக்கம்.

அவ்வகையில் ப.பா.சி நடத்தும் 48ஆவது புத்தகக் கண்காட்சி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை (டிசம்பர் 27) தொடங்கவுள்ளது.

இக்கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

இது குறித்து, ப.பா.சி தலைவர் சேது சொக்கலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் 48வது புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை (டிசம்பர் 27) தொடங்க உள்ளது. நாளை தொடங்கி ஜனவரி 12 வரை மொத்தம் 17 நாட்கள் நடைபெறுகிறது.

மாலை 4:30 மணிக்கு தொடங்க உள்ள இந்த புத்தகக் கண்காட்சியினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

புத்தகக்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.

அனைத்து இடங்களிலும் அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடியுடன் மொத்தம் 900 அரங்குகள் இடம்பெற உள்ளன. நாளை மாலை புத்தகக் கண்காட்சி தொடங்க இருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அரங்கம் அமைக்கும் பணிகள் முடிந்துள்ள நிலையில், அரங்கங்களில் புத்தகங்கள் கொள்முதல் செய்தல், புத்தகங்கள் அடுக்குதல் உள்ளிட்ட இதர பணிகள் நடைபெற்று வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: நல்லகண்ணு 100: ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு தோழர் நல்லகண்ணு பெயர் - முதலமைச்சர் உத்தரவு!