Tamilnadu

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 6,000 கன அடி நீர் வெளியேற்றம் : நீர்வளத்துறை எச்சரிக்கை !

தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பிற்பகல் 12.00 மணி அளவில் விநாடிக்கு 6,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்படவுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேறவேண்டும் என நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழுக்கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும்.

இந்த ஏரியில் இன்று காலை 10.00 மணி நிலவரப்படி நீர் இருப்பு 22.76 அடியாகவும், கொள்ளளவு 3315 மில்லியன் கன அடியாகவும் மற்றும் நீர் வரத்து வினாடிக்கு 2450 கன அடியாகவும் உள்ளது. ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.

எனவே அணையின் நீரினை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை அடையாற்றின் வெள்ள தணிப்புக்காக (Flood Moderation in Adayar River) ஏரியிலிருந்து நேற்று 13.12.2024 காலை 10.30 மணி அளவில் விநாடிக்கு 4500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், மேலும் இன்று 14.12.2024 பிற்பகல் 12.00 மணி அளவில் விநாடிக்கு 6,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்படும்.

எனவே, ஏரியிலிருந்து நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்துர், காவனுர், குன்றத்துர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: நிரம்பிய அணைகள் : இரு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை : முழு விவரம் உள்ளே !