Tamilnadu

நிரம்பிய அணைகள் : இரு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை : முழு விவரம் உள்ளே !

விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சி, மேல்மலையனூர், தாலுக்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்ததால் வீடூர் அணைக்கு நீர் வரத்து அதிகமானது. இதையடுத்து அணையில் உள்ள 9 மதகுகளில் 5 மதகுகளின் வழியாக வினாடிக்கு 3.150 கன அடி நீர் சங்கராபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால் வீடூர் அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக அணையின் நீர் இருப்பு மொத்தமுள்ள 32 அடியில் 31.20 அடியை எட்டியது.இதைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு நலன் கருதி அணைக்கு வரும் 10,917 கனஅடி நீரை முழுவதும் அணையின் 9 கண் மதகுகளிலிருந்து வினாடிக்கு 10917 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தொடர்ந்து மழைப்பொழிவின் அளவைப் பொறுத்து அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரிக்க கூடும் என்பதால் சங்கராபரணி ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொம்பூர்,கணபதி பட்டு, ரெட்டி குப்பம், இடையப்பட்டு ஆண்டிபாளையம், உள்ளிட்ட 18 கிராம மக்களுக்கும் மற்றும் புதுச்சேரி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கையை ஒட்டி கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் வீடூர், பொம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் எச்சரிக்கை ஒலி எழுப்பி பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதே போல விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை நீர்தேக்க அணை நிரம்பியதை தொடர்ந்து, அணையில் இருந்து வைப்பாற்றில் விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also Read: 75 ஆண்டுகளில் முதன்முறை... மாநிலங்களவைத் தலைவருக்கு எதிராக நோட்டீஸ் : காரணத்தை விளக்கும் முரசொலி !