Tamilnadu

மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு : ஆட்சியர்களுக்கு அறிவுரை !

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, இலங்கை மற்றும் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை நோக்கி வரத் தொடங்கியது. அது தற்போது மன்னார் வளைகுடா பகுதியில் நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இது தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள கடிதம் வாயிலாக அறிவிக்கப்பட்டதோடு தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் அவர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேட்டறிந்து தகுந்த அறிவுரைகளை வழங்கினர்.

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, கன மற்றும் மிக கனமழை பெற வாய்ப்பு உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்கள்அனுப்பி வைக்கப்பட்டு, கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடி நிலைமையை கேட்டறிந்து, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.

Thamirabarani River

இதனிடையே இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, சராசரியாக, தென்காசியில் 16.3 செ.மீ., அரியலூரில் 15.9 செ.மீ., மயிலாடுதுறையில் 14.6 செ.மீ., திருநெல்வேலியில் 10.5 செ.மீ., தூத்துக்குடியில் 9.8 செ.மீ., கடலூரில் 9.5 செ.மீ., பெரம்பலூரில் 9.3 செ.மீ., விருதுநகரில் 7.3 செ.மீ., தஞ்சாவூரில் 7.2 செ.மீ., காஞ்சிபுரத்தில் 7.2 செ.மீ., திண்டுக்கல்லில் 6.7 செ.மீ., திருவாரூரில் 6.5 செ.மீ., செங்கல்பட்டில் 6.3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

நேற்று முதல் பூண்டி, பிச்சாட்டூர் மற்றும் சாத்தனூர் நீர்த்தேக்கங்களில் இருந்து தகுந்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளுடன் உபரி நீர் திறக்கப்பட்டது. இன்று (13.12.2024) செம்பரம்பாக்கம், புழல் மற்றும் சேத்தியார்தோப்பு ஏரிகளிலிருந்து உபரி திறப்பது குறித்து உரிய எச்சரிக்கை அளிக்கப்பட்ட பின்னர் திறந்துவிடப்பட்டுள்ளது.

நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும் என்று சிவப்பு அலர்ட் விடுத்தது. இதன் காரணமாக தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை ஏற்பட்டு, தாமிரபரணி ஆற்றில் 50,000 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல மாவட்ட நிருவாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் வெள்ள அபாயம் குறித்து 11.75 இலட்சம் செல்பேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

அரியலூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் சுவர் இடிந்து விழுந்து இருவரும், சிவகங்கை மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி இருவரும் இறந்துள்ளனர்.

மயிலாடுதுறை, செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மொத்தம் 117 கால்நடைகள் இறந்துள்ளன. அரியலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மொத்தம் 438 வீடுகள் சேதமடைந்துள்ளன. 50 நிவாரண முகாம்களில், 2034 நபர்கள் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அரியலூர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், மதுரை, திண்டுக்கல், கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, இராமநாதபுரம், சேலம், விருதுநகர், சிவகங்கை, தேனி, கரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று இன்று ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்ட போது, கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, கனமழை காரணமாக மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை உடனடியாக அகற்றிட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிட்டார். மேலும், முகாம்களில் மக்களுக்கு வழங்கிட உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதையொட்டி நிவாரண பணிகளை மேற்கொள்ள மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களையும் அனுப்பி வைத்துள்ளார்.

Also Read: ரூ.199, ரூ.499, ரூ.999... - 3 அலகுகளில் ‘கூட்டுறவு பொங்கல்’ தொகுப்பு விற்பனை... பட்டியலை வெளியீடு !