Tamilnadu

பெரம்பூர் - வில்லிவாக்கம் இடையே 4-வது இரயில் முனையம் - ஒன்றிய அமைச்சரிடம் திமுக MP கிரிராஜன் கோரிக்கை!

டெல்லியில் உள்ள இரயில் பவனில் ஒன்றிய அரசின் இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை மாநிலங்களவை திமுக உறுப்பினர் இரா. கிரிராஜன் நேரில் சந்தித்து இந்த கோரிக்கை தொடர்பாக மனு அளித்துள்ளார்.

திமுக எம்.பி. கிரிராஜன் அளித்துள்ள மனுவில்,

சென்னை மாநகரில் பெருகி வரும் மக்கள்தொகைக்கு இரயில் போக்குவரத்து அவசியமாக உள்ளதாகவும், மருத்துவம், வியாபாரம், கல்வி, வணிகம், வழிபாட்டு தலம், சுற்றுலா ஆகிய தேவைகளுக்காக சென்னையை நோக்கி தினந்தோறும் பல்லாயிரகணக்கானோர் வருவதால், நாட்டின் அனைத்து பகுதிகளிருந்தும் இரயில்கள் இயக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

சென்னையில் சென்டரல், எழும்பூர் ஆகிய இரயில் முனையங்கள் போதுமானதாக இல்லை என்பதால், மூன்றாவது இரயில் முனையமாக செயல்படுத்தப்படவுள்ள தாம்பரம் என்பது புறநகர் பகுதியில் அமைந்துள்ளதால், சென்னையின் மைய பகுதியில் நான்காவது இரயில் முனையம் அமைக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியிலுள்ள இலட்சகணக்கான பொது மக்கள் இரயில் பயணத்தை எளிதாக மேற்கொள்ள வசதியாக, இரயில்வே துறைக்கு சொந்தமாக பெரம்பூர், வில்லிவாக்கம் இடையே காலியாக உள்ள நூற்றுகணக்கான ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் நான்காவது இரயில் முனையத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இந்த திட்டத்திற்கு தேவையான நிதியை வரும் 2025ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் எம்.பி. கிரிராஜன் அளித்துள்ள மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

Also Read: ”சுகாதாரத்துறையில் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி உதவி இல்லை” : நாடாளுமன்றத்தில் கனிமொழி சோமு MP ஆவேச பேச்சு!