Tamilnadu

"ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்களின் குரலாக திமுக இருக்கிறது" - கனிமொழி MP !

திமுக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு தென்மண்டல ஆய்வுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக துணை பொது செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக மூத்த முன்னோடிகள் 100 பேருக்கு கனிமொழி பொற்கிழிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், "திராவிட இயக்கமும் திமுகவும் ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்து வருகிறது. யாருக்கெல்லாம் காலம் காலமாக கல்வி உரிமை எல்லாம் மறுக்கப்பட்டதோ அந்த மக்களின் குரலாகத்தான் திராவிட இயக்கம் தோன்றியது. அண்ணா காலம் முதல் தற்போது உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலம் வரை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறது.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். அது சுயமரியாதையாக கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கொள்கை. திராவிட முன்னேற்ற கழகத்திற்கு விமர்சனங்கள் காலம் காலமாக வந்து கொண்டிருக்கிறது. நாம் அதை எதிர் கொள்ள வேண்டும். அனைத்து மக்களும் ஒரே இடத்தில் வாழ வேண்டும் என்று உருவாக்கியது தான் சமத்துவபுரம். அதை உருவாக்கியவர் கலைஞர் . இதை வேறு எந்த தலைவரும் செய்யவில்லை. ஜாதி மத பேதமின்றி அனைவரும் ஒரே இடத்தில் வாழ முடியும் என எடுத்துக்காட்டியவர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக 17 சதவீத இட ஒதுக்கீட்டை உருவாக்கியவர் கலைஞர். குடிசை வீடுகளில் இருந்தவர்களுக்கு வீடு கட்டி கொடுத்து, குடிசை மாற்று வாரியத்தை தந்தவர் கலைஞர். அவரின் வழியில் இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றியவர் முதலமைசார் மு.க.ஸ்டாலின்தான்.

திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காக என்ன செய்தது என்று கேள்விகள் அடுத்த மாதம் முதல் தொடங்கும். வாட்ஸ்அப் குழுவில் அதை பதிவிட ஒரு அமைப்பு இருப்பார்கள். நாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். பல மாநிலங்களில் மக்களை ஜாதி வாரியாக பிரித்து தான் கட்சிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதே போல் தமிழ்நாட்டிலும் இதே குழப்பங்களை கட்சியினர் செய்ய முயற்சி செய்வார்கள். ஆனால் இது தந்தை பெரியாரின் மண், திராவிட இயக்கத்தின் மண், டாக்டர் கலைஞரின் மண். இதையெல்லாம் மக்கள் நம்ப தயாராக இல்லை. இருந்தாலும் மக்களுக்கு நாம் அதை தெளிவாக நேரடியாக சொல்ல வேண்டும்.

இன்னைக்கு வாய்சவடால் எல்லாம் நிறைய வரலாம். ஆனால் நிஜத்தில் என்ன வரும் என்பது தெரியாது. இப்படி பேசியவர்கள் யாரும் ஒன்றும் செய்து காட்டியது இல்லை. அதை நாம் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். திண்ணை பிரச்சாரங்கள், தெருமுனை பிரச்சாரங்கள், வீடு வீடாக சென்று திமுகவின் சாதனைகளை எடுத்துரையுங்கள்" என தெரிவித்தார்