Tamilnadu

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் போர்க்கால நடவடிக்கைகள்! : தமிழ்நாடு அரசு செய்தது என்ன?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி, வெள்ள நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் பெருமக்களையும் கண்காணிப்பு அலுவலர்களையும் துரிதமாக வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி பணிகளை துரிதப்படுத்தினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைப்படி, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக பாதுகாப்பாக தங்குமிட வசதி தேவையான உணவு, பால், குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் உடனடியாக வழங்கவும் மாண்புமிகு அமைச்சர்கள் தலைமையில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும் குழு அமைத்து உத்தரவிட்டு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த பெருவெள்ள பாதிப்புகளை கண்டறிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க, வனத்துறை அமைச்சர் முனைவர்.க. பொன்முடி அவர்கள், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி அவர்கள், போக்குவரத்துறை அமைச்சர்ச.சி. சிவசங்கர் அவர்கள், பொதுப் பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். க.மணிவாசன், இ. ஆ. ப., அவர்கள், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ. ஆ. ப., அவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் டாக்டர் என்.சுப்பையா, இ. ஆ.ப., அவர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனர் திரு.ப. பொன்னையா இ.ஆ.ப., அவர்கள். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.சி.பழனி. இ.ஆ.ப., ஆகியோர் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.

கடலூர் மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேளாண்மை உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ககன் தீப் சிங் பேடி, இ.ஆ.ப., தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டு திட்ட இயக்குநர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சி.அ. ராமன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இ.ஆ.ப., அகியோர் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ். பிரசாந்த் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.

விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வழங்கப்பட்ட உதவிகள்.

விழுப்புரம் மாவட்டம்

தாழ்வான பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு 67நிவாரண முகாம்களில் 4906 நபர்கள்(ஆண்கள் 2070, பெண்கள் 2239, குழந்தைகள் 597) தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

நிவாரண முகாம்களில் தங்கி இருந்த பொதுமக்களுக்காக 16,616 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக 5 சமுதாய சமையலறையில் (Community Kitchen) இருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டநபர்களுக்கு27,432 உணவு பொட்டலங்கள் தயார்செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக 03.12.2024 அன்று 1,58,318 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக 4000 லிட்டர் பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களில் இருந்து 11,100 அரிசி பாக்கெட்டுகள் (65,000 கிலோ), 10,500 மளிகைப்பொருள் பாக்கெட்டுகள், 2,907 ஆடைகள், 1,320 போர்வைகள், 14,517 பிஸ்கட்டுகள், 10,000 தண்ணீர்பாட்டில்கள், 200 பழச்சாறுபாட்டில்கள், 100 கொசுவலை, 10 தார்ப்பாய், 820 பெட்ஷீட்டுகள், 565 நாப்கின்ஸ், 700 பால்பவுடர் பாக்கெட்டுகள், 1000 பாய், 1000 பேரிச்சம்பழ பாக்கெட்கள் 1000 மில்க்ஷேக், பிரட், தீப்பெட்டி, 1000 சோப்பு, 2000 பற்பசை வரப்பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையால் 03.12.2024 அன்று 116 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, அதில் 8,464 நபர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

மூன்று நகராட்சிகளில் மழைநீர் சூழ்ந்த 42 வார்டுகளில் 469 தூய்மை பணியாளர்களைக் கொண்டும், பேரூராட்சிகளில் மழைநீர் சூழ்ந்த12 வார்டுகளில் 333 தூய்மை பணியாளர்களைக் கொண்டும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளது. ஊரகவளர்ச்சித்துறையின் மூலமாக அனைத்து ஊராட்சிகளிலும் தூய்மைப்படுத்தும் பணிகள் 04.11.2024 அன்று நடைபெற உள்ளது.

03.12.2024 அன்று மழைநீர்சூழ்ந்த2035 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளது.

03.12.2024 அன்று 45,350 தண்ணீர்பாட்டில்கள், 1,500 பிரெட் பாக்கெட், 35,400 பிஸ்கட்டுகள் பொதுமக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

03.12.2024 அன்றுவரை கனமழையின் காரணமாக 728 வீடுகள் பகுதியாகவும், 132 வீடுகள் முழுமையாகவும் ஆக மொத்தம் 860 வீடுகள் சேதமடைந்துள்ளது.

கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின் தொடர்ச்சியாக, தென்பெண்ணை ஆற்றில் 02.12.2024 அன்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் மாவட்டம், கடலூர் மற்றும் பண்ருட்டி வட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கும் 25 க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் கண்டறியப்பட்டது.

மேற்படி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு உடனடியாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்சித்துறை, நீர்வளத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை , தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட பல்வேறு குழுவினருடன் இணைந்து பொதுமக்களை முன்கூட்டியே பாதுகாப்பாக வெளியேற்றி பாதுகாப்பு தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டனர். முகாம்களில் தங்கவைக்கப்பட்ட பொதுமக்களுக்கு 03.12.2024 அன்று ஏற்படுத்தி தரப்பட்ட மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.

35 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டது. 19,654 பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்க 68,350 உணவுப் பொட்டலங்கள் வாங்கப்பட்டது.

மேலும் 15 இடங்களில் சமுதாய சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டு, 20,300 உணவுப் பொட்டலங்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10,871 பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டது. வெளி மாவட்டங்களிலிருந்து வரப்பெற்ற நிவாரணப் பொருட்களில் 3,000 லிட்டர் பால் பாக்கெட்டுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டது.

இன்னல்களுக்கு ஆளான பொதுமக்களுக்காக 50 இடங்களில் தற்காலிக மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, 5,285 நபர்களுக்கு சிகிச்சையும் மருந்து பொருட்களும் வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களைச் தேடிச்சென்று அவர்களுக்கு 1,000 போர்வைகள், 5,560 பிரெட் பாக்கெட்டுகள், 13,964 தண்ணீர் பாட்டில்கள் உடனடியாக வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட கிராமங்களில் பகுதிகளில் உடனடியாக தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது. இதன் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை பெய்த பொழுதிலும் எவ்வித உயிரிழப்பும், ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.

எனினும் கனமழையினால் சேதமடைந்த வீடுகள், கால்நடை இறப்பு ஆகியவற்றிற்கான நிவாரண உதவிகள் உடனுக்குடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகம் அரசின் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து தொடர் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறது.

ஃபெஞ்சல் புயல் தாக்கத்தினால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 01.12.2024 அன்று பெய்த 9.7 செ.மீ மழையளவு, 02.12.2024 அன்று பெய்த 17 செ.மீ மழையளவு மற்றும் தென்பெண்ணை ஆற்றில் வரப்பெற்ற அதிகப்படியான நீர்வரத்து ஆகியவற்றின் காரணமாக 461 கூரை வீடுகளும், 113 சீட்டு வீடுகளும் சேதமடைந்த நிலையில் 19 பசுமாடுகள், 76 கன்றுக்குட்டிகள் மற்றும் 52 ஆடுகள் இறந்துள்ளன. இதுவரை வீடு பாதிப்பு மற்றும் கால்நடை உயிரிழப்பு ஆகியவற்றிற்காக நிவாரணத்தொகை ரூ.37,04,000 (ரூபாய் முப்பத்தேழு இலட்சத்து நான்காயிரம் மட்டும்) வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு நபர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேற்படி பாதிப்புக்குள்ளான நபர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. மேலும், பயிர் சேதம் குறித்தான கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேற்படி மழை பாதிப்பினைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 16 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட 612 குடும்பங்கள் (ஆண்கள் 831 பெண்கள் 943 குழந்தைகள் 206) மேற்படி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 3809 உணவு பொட்டலங்கள், குடிநீர் மற்றும் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமும், ஆவின் நிறுவனம் மூலம் 6220 பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

வெள்ள பாதிப்பு ஏற்பட்ட 3 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 31 கிராம ஊராட்சிகள் ஆகியவற்றில் சுமார் 1630 தூய்மை காவலர்கள் தூய்மைப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், மழை பாதிப்புக்குள்ளான கிராமங்களில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களில் 01..12.2024 அன்று 1259 நபர்களுக்கும், 02.12.2024 அன்று 3258 நபர்களுக்கும், 03.12.2024 அன்று 2995 நபர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தேவையான மருந்துகள் வழங்கப்பட்டன. 03.12.2024 அன்று 33 சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டன.

Also Read: சென்னை மாநிலக் கல்லூரியில் ரூ.21.60 கோடி செலவில் சிறப்பு மாணாக்கர் விடுதி : முதலமைச்சர் திறந்து வைத்தார்!