Tamilnadu
“திருவள்ளூரில் 150 ஏக்கரில் திரைப்பட நகர் : விரைவில் பணிகள் துவங்கும்” - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் !
சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் புதிய படப்பிடிப்பு தளங்கள் அமையவுள்ள இடங்களில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன வளாகத்தில் பொதுப்பணித் துறை மூலமாக நவீன தொழில்நுட்பங்களுடன் மூன்று படப்பிடிப்புத் தளங்கள் அமைக்க, 2023-24ஆம் ஆண்டிற்கான செந்தர விலை விகிதப் பட்டியல் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள மதிப்பீடு ரூ.39.33 கோடிக்கு நிருவாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணை வெளியிடப்பட்டிருந்தது.
அந்த வகையில் இன்று அமைச்சர் சாமிநாதன் நவீன தொழில்நுட்பங்களுடன் மூன்று படப்பிடிப்புத் தளங்கள் அமைய உள்ள இடங்களில் ஆய்வு செய்தார். அப்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராம், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் வைத்திநாதன், திரைப்பட கல்லூரி தலைவர் நடிகர் ராஜேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது, “தமிழ்நாடு அரசின் செய்தி தொடர்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எம்.ஜி.ஆர் திரைப்பட நகரில் பல்வேறு பணிகள் நடைபெற முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் சில பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது; சில பணிகள் நடைபெற உள்ளது.
ஏற்கனவே, திரைப்பட நகரமாக உள்ள படப்பிடிப்பு தளம் பழுதடைந்திருந்த நிலையில் ரூ.5 கோடி செலவில் கடந்த ஆண்டு மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டு குளிர்சாதன வசதியுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் படம் எடுக்கக் கூடியவர்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மூன்று தளங்கள் கொண்ட படப்பிடிப்புகள் நடத்துவதற்கேற்ற அரங்கம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ.39 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் இந்த 3 அரங்கங்களும் கட்டப்பட உள்ளது. படப்பிடிப்பு செய்பவர்கள் மற்றும் சின்னத்திரை சார்ந்தவர்களுக்கு இது ஒரு அறிய வாய்ப்பாக இருக்கும். சென்னை பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுவதால் சிரமங்கள் மற்றும் செலவுகள் குறைக்கப்படுகிறது. அந்த வகையில் திரைத்துறையினர் விரும்புகின்ற திட்டமாக இது அமையும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் திரைப்பட நகர் உருவாக்கப்பட உள்ளது என முதல்வர் அறிவித்தார். அதனை இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டுள்ளார். விரைவில் பணிகள் தொடங்க உள்ளது” என்றார்.
Also Read
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!