Tamilnadu
”தமிழர்களின் பெருமை பேசும் சென்னை அருங்காட்சியகம்” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் மு.பெ.சாமிநாதன்!
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக கலையரங்கில் இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் அருங்காட்சியகங்கள் துறை சார்பில் நடைபெற்ற பெருநகர சென்னையின் பெருமை பேசும் கொண்டாட்டங்கள் தொடர்பான “பண்பாடு - ஒரு மீள்பார்வை” என்ற கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, விழாப்பேருரையாற்றினார்.
அப்போது பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், "சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பெருநகர சென்னையின் பெருமையைப் பேசும் விதமாக ‘சென்னை தினம்’ கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக சென்னை தினம் என்பது, என்னவென்றால் 1639 ஆம் ஆண்டு ஆகஸ்டு 22-ஆம் நாள் தற்போது புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள நிலப் பரப்பை ஆங்கிலேயர்கள் வாங்கினார்கள். அந்த நாள் இதுவரை சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது. சென்னைக்கு 385 ஆவது பிறந்த நாளை பெருமையாக அருங்காட்சியகம் கொண்டாடி வருகிறது. இதற்காக ஆகஸ்டு 20 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை சிறப்புக் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்புக் கண்காட்சியில் சென்னை 385 ஆண்டு மட்டும் பழமையானதல்ல இலட்சக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை மெய்ப்பிக்கும் விதமாக இலட்சக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த ராபர்ட் ஃபுரூஸ் ஃபுட் அவர்கள் கண்டெடுத்த பழைய கற்கால கருவிகள், இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கீழடி அகழாய்வில் கிடைத்த மட்கலன்கள் ஆகியன இடம் பெற்றுள்ளன. கண்காட்சியில் எம்டன் கப்பல் சென்னை மீது எறிந்துவிட்டு சென்ற வெடிகுண்டுகளின் எச்சங்கள் மற்றும் இசைக் கருவிகள், இன்றைய தலை முறையினர் அறிந்திராத தோலா, எடைக் கற்கள். மரக்கால், படி போன்ற அளவைகள் அழகாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட வாட்கள், பீரங்கிக் குண்டுகள் ஆகியன சிறப்பு மிக்கவை.
இனிய தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என மூன்றாக பிரிந்திருப்பது போல சென்னை தின கொண்டாட்டங்கள் கண்காட்சி வடிவிலும், கலை நிகழ்ச்சிகள் வடிவிலும் கருத்தரங்கு வடிவிலும் மூன்று வகையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இன்றைய தினம் சென்னையின் பெருமையை போற்றும் விதமாக “பண்பாடு-ஒரு மீள் பார்வை” என்ற தலைப்பில் சென்னையின் தொன்மை பேசும் ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ”அருங்காட்சியகத்தில் கடந்த 20-ஆம் தேதியிலிருந்து வருகின்ற 29-ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெற்று வருகிறது. நம்முடைய பெருமைக்குரிய சென்னை மாநகரம் எப்போது துவங்கப்பட்டது, அதனுடைய வரலாறும், அதேநேரத்தில், இந்தியாவிலேயே இரண்டாவது அருங்காட்சியகமாக சிறந்து விளங்கக்கூடிய, பெருமை பேசக்கூடிய வகையில் எழும்பூரில் உள்ள சென்னை அருங்காட்சியகம் அமைந்திருக்கிறது. வரலாற்றில் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் மாணவச் செல்வங்கள் கலந்து கொள்ளக்கூடிய நிகழ்வாக இந்த கருத்தரங்கு துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் இக்கருத்தரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல கலை, பண்பாடு என்பது தமிழருடைய பண்பாடு, இந்தியாவிலேயே இரண்டாவதாக சென்னை அருங்காட்சியகம் விளங்கிக் கொண்டிருக்கிறது.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பழைய நிலங்களின் வீட்டுப் பட்டா குறித்து வந்த குட் நியூஸ்... அரசின் முக்கிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே!
-
உங்கள் எதிர்காலத்திற்கு நாங்கள் கேரன்டி! 300 வீரர்களுக்கு அரசு வேலை வழங்கி சாதனை:துணை முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 'தமிழரசு' மின் இதழ்... Web Application மற்றும் Mobile Application.. அசத்தல் திட்டம்!
-
ரூ.78.41 கோடி... 13 மாவட்டங்களில் 26 முடிவுற்ற திட்டப்பணிகள்... திறந்து வைத்த முதலமைச்சர் !
-
சுப்பிரமணியபுரத்தில் ரூ.62.68 கோடி 396 அடுக்குமாடி குடியிருப்புகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர்!