Tamilnadu
“சமத்துவம் அடையும்வரை அனைவருக்கும் சலுகைகளை கொடுத்துதான் ஆக வேண்டும்” - அமைச்சர் பொன்முடி !
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எம் சி சி பள்ளியில் கல்வி மேம்பாட்டிற்கான கருத்தரங்கம் இன்று (ஆக 24) நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.பி. வில்சன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
அப்போது அமைச்சர் பொன்மூடி மேடையில் பேசியதாவது, "தமிழகத்தை பொறுத்தவரையில் அதிக அளவில் ஏற்றத்தாழ்வை நீக்கி பொதுமக்களுக்கு கல்வி கொடுத்ததில் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது. குறிப்பாக அன்றைய காலகட்டத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் சேர்ந்தவர்களே அதிக அளவில் கல்வி பயின்றவர்களாக இருந்தார்கள். அதற்கு மிக முக்கிய காரணம் அங்கு இருந்த கிறிஸ்தவ மிஷனரிகளே.
இதன் காரணமாக தான் முத்தமிழறிஞர் கலைஞர், அவரது ஆட்சி காலத்தில் சிறுபான்மையினர் வாரியம் என்ற ஒன்றை அமைத்தார். அதன் காரணமாக பல சிறுபான்மையினர் பெருமளவில் பயனடைந்தார்கள். குறிப்பாக திராவிட மாடல் தமிழ்நாடு அரசு சார்பில் சிறுபான்மையினருக்கான பல்வேறு நலத்திட்டங்களையும் தொலைநோக்கு திட்டங்களையும் நமது முதல்வர் கொடுத்து உள்ளார். இதன் பெயர் தான் திராவிட மாடல் ஆட்சியாகும்.
பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றால், அவர்கள் படிக்கும் பொழுது பலதரப்பட்ட தரவுகளை உள்வாங்க கூடிய அளவில் ஒரு சூழ்நிலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சிறப்பாக அப்படிப்பட்ட ஒன்றுதான் தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்ட 'நான் முதல்வன் திட்டம்'. குறிப்பாக இளைஞர் திறன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி அவர்கள் தான் தற்பொழுது நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்து இளைஞர்களையும் பலதரப்பட்ட தரவுகளை உள்ளடக்கி அளிக்கக்கூடிய நான் முதல்வன் பயிற்சியின் மூலம் தேர்ச்சி பெற செய்து வருகிறார்.
நாங்கள் சிறு வயதில் பள்ளியில் பயிலும் பொழுது மதிய உணவு கேட்டாலே எங்கள் பெற்றோர்கள் வேலைக்குச் செல்ல வேண்டும் என கூறி சென்று விடுவார்கள். ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையை மாற்றி காலை சிற்றுண்டியே ஆரம்பப் பள்ளிகளில் தர வைத்தவர் தான் நமது முதல்வர்.
அன்றைய காலகட்டத்தில் நாங்கள் அனைவரும் விடுதியில் தங்கி கல்லூரி படிப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்று. ஏனெனில் அந்த அளவிற்கு யாருக்கும் வருமானம் இருந்தது கிடையாது. இதை நன்கு உணர்ந்த நமது தமிழ்நாடு முதல்வர் புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் என்ற பெயரில் மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவிகளுக்கும் அறிவித்து வழங்கி வருகிறார்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் வேற்றுமையில் ஒற்றுமை, பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும் சமத்துவம் என்ற ஒன்றை அடையும்வரை அனைவருக்கும் சலுகைகளை கொடுத்தாக தான் வேண்டும். சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் கூறியதை போல இங்கு ஜாதி பெயரைத் தூரி பல வேற்றுமைகள் உள்ளது. அதனை ஒழிக்க தான் வேண்டும். பிற்படுத்தப்பட்டவர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்கின்ற துறை மட்டும் இருந்த வேளையில் அவற்றுடன் சிறுபான்மையினர் துறையும் சேர்த்தவர் தான் முத்தமிழறிஞர் கலைஞர். சிறுபான்மைக்காக அதிக அளவில் உழைத்த அரசுதான் திராவிட மாடல் அரசு என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி பேசியதாவது, "சிறுபான்மையின பள்ளியில் பயில்கின்ற மாணவ மாணவிகளுக்கு இன்று, நான் முதல்வன் திட்டம் எல்லா இடத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக சிறுபான்மையின பள்ளிகளிலே படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கும் உயர்கல்விக்கு சென்றால் அவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பையும் தமிழக முதல்வர்கள் அறிவித்து அதையும் பயன்படுத்திக் கொண்டிருகிறார்.
இந்தியாவிலேயே கல்வி வளர்ச்சிக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் பொதைப்பொருள் விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
போதை கலச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். போலி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். யார் தவறு செய்திருந்தாலும் அவர்களை இந்த அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்." என்றார்.
Also Read
-
“‘தான் திருடி, பிறரை நம்பார்’ என்பதைப் போன்றவர்தான் எடப்பாடி பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000! : நாளை (ஜன.8) தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!