Tamilnadu
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை : தொடர்ந்து எல்லை மீறும் ஆளுநர் மாளிகை!
இந்தியாவில் தாங்கள் ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதில் இருந்து மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். குறிப்பாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் வேண்டும் என்றே இழுத்தடித்து வருகிறார். அதுமட்டுமல்லாது, ஒரு ஆளுநராக இருந்து கொண்டு பொது நிகழ்ச்சிகளில் தனது சனாதன கருத்துக்களைப் பேசி வருகிறார்.
குறிப்பாக, கால்டுவேல் மற்றும் ஜி.யு.போப் ஆகியோர் குறித்து அவதூறாகப் ஆளுநர் பேசியது தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ’சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்’ எனவும் ஆளுநர் பேசியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதேபோல் தமிழ்நாட்டை 'தமிழகம்' என்று சொல்வதுதான் சரி என வீண் பிடிவாதம் பிடித்து ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு என்பதற்கு பதில் 'தமிழகம்' என்று மாற்றினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்ததை அடுத்து மீண்டும் ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு என்ற வாசகம் இடம் பெற்றது.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று போதித்த ஆசான் திருவள்ளுவரைக் காவியாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம், மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் வேலைகளில் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாகத்தான் திருவள்ளுவர் தினத்தன்று, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காவி உடை அணிந்த திருவள்ளுவரின் படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பின்னர் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசிய ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
தற்போது மீண்டும், ஆளுநர் மாளிகை வெளியிட்டுள் அழைப்பிதழில் காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படம் இடம் பெற்றுள்ளது. திருவள்ளுவர் திருநாள் விழா என்ற பெயரில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் திருவள்ளுவர் காவி உடையுடன் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!
-
கோவையில் அத்துமீறல்: காவல் நிலையத்தையும் விட்டுவைக்காத த.வெ.க.வினரின் விளம்பர மோகம்!
-
இதைக்கூட சரி செய்ய துப்பு இல்லாமல் எதற்கு முதலமைச்சர் நாற்காலி : முரசொலி கடும் தாக்கு!