Tamilnadu

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை காயப்படுத்திய பழனிசாமி : தேர்தல் நேரத்தில் வந்த புது பாசம்!

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத்தலைவர் கு. தியாகராஜன் அளித்த பேட்டியில்,

தனது ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கொச்சைப்படுத்தி காயப்படுத்திய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்களின் மீது அக்கறை கொண்டவர் போல பாசாங்கு செய்கிறார் .

அவருடைய பாசாங்கு அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்களின் மத்தியில் என்றென்றைக்கும் எடுபடாது. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் பேட்டி.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் மீது தற்போது திடீரென தேர்தல் கால பற்று ஏற்பட்டு அவர்களின் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வில்லை என எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசி வருகிறார்.

இது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை மதிக்காமல், அவர்களின் போராட்ட காலங்களில் அவர்களை அழைத்துக் கூட பேசாமல், அவர்களின் கோரிக்கைகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாமல்,

பத்தாண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்தும் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடாமல், குறிப்பாக கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் என்ற ஒரு வார்த்தை கூட இடம் பெறாமல் திட்டமிட்டே தவிர்த்து,

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர்தான் எடப்பாடி பழனிசாமி அவர்கள்.

சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுகிறதே அன்றி நிராகரிக்கப்படவில்லை என்றும் அறிக்கை வெளியிட்டார்கள்.

இது மிகுந்த நம்பிக்கையை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

இதனை சற்றும் எதிர்பாராத எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது கரிசனை காட்டுவது போலவும், அவர்கள் மீது அக்கறை கொண்டவர் போலவும் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

ஆங்காங்கே ஊடக சந்திப்பின் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்றவில்லை என்றும் பேசி ஆதாயம் தேடப் பார்க்கிறார்.

கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியில் எங்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக அறவழியில் பல்வேறு போராட்டங்களை நாங்கள் நடத்திய போது அதன் நியாயத் தன்மையை அறியாமல் எங்களின் போராட்டங்களை உதாசினப்படுத்தி, கொச்சைப்படுத்தி ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தினார்.

அரசுப்பணத்தில் நாளேடுகளில் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்து, அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஊதியம் குறித்து பொதுமக்களிடம் வேண்டுமென்றே அவதூறு பரப்பி அதன் மூலம் போராட்டத்தை ஒடுக்க நினைத்தவர் தான் எடப்பாடி பழனிசாமி அவர்கள் என்பதை அரசு ஊழியர் ஆசிரியர்கள் நன்கு அறிவார்கள்.

எங்களின் போராட்டங்களை ஒடுக்க அவர் கையாண்ட அடக்குமுறைகள்,கைது நடவடிக்கைகள், நீதிமன்ற வழக்குகள், துறை ரீதியிலான நடவடிக்கைகள், ஆசிரியர்களின் பணி மாறுதல்கள், போராட்ட காலங்களுக்கான ஊதிய பிடித்தங்கள், போன்ற இவரின் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எல்லாம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நெஞ்சங்களில் எல்லாம் ஆறாத வடுவாக இன்றும் நிலைத்து நிற்கிறது.

மேலும், ஒரு நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெறும் ஊதியம் குறித்து எள்ளிநகையாடி எலிமெண்டரி ஸ்கூல் HM 82 ஆயிரம் சம்பளம் வாங்குறான் என அவதூறாகப் பேசி ஆசிரியர் பேரினத்தையே அவமானப்படுத்தியவர் தான் எடப்பாடி பழனிசாமி அவர்கள்.

அவர் பேசிய அவதூறு குரல்பதிவு சமூக வலைத்தளங்களில் எல்லாம் வைரலாகப் பரவி ஆசிரியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார் உள்ளங்களில் எல்லாம் இன்றளவும் வேதனையைத் தந்து கொண்டுதான் இருக்கிறது.

தனது ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை திட்டவட்டமாக அமல்படுத்த முடியாது என்று எங்களை உதாசினப்படுத்தியவர் இன்று தனது ஓட்டு அரசியலுக்காக பழைய ஓய்வூதியத்திட்டத்தை தற்போது ஏன் திமுக அமல்படுத்தவில்லை என நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

கடந்த ஆட்சியில் ஒட்டுமொத்த அரசு கஜானாவை காலி செய்து விட்டு ஆட்சி முடியும் தருவாயில் அகவிலைப்படி உயர்வை அடியோடு முடக்கியவரே, இன்று ஆறு மாதங்கள் அகவிலைப்படி உயர்வை திமுக அரசு பிடித்தம் செய்து வழங்கி வருகிறது என்று புலம்புவது வேடிக்கையாக உள்ளது.

போராடி பெற்ற உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை முடக்கியவர் யார்? ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து பணமாக பெறும் நடைமுறையை முடக்கியவர் யார்? என்பதை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நன்கு அறிவார்கள்.

இவற்றையெல்லாம் முடக்கிய எடப்பாடி பழனிச்சாமி அவர்களே இன்று கேள்வியையும் எழுப்பி வருவது மிகுந்த நகைச்சுவையாக உள்ளது.

Also Read: பா.ஜ.க செய்த வளர்ச்சிகள் என்ன? : 10 ஆண்டுகளை வீணாக்கிய மோடி அரசு!