Tamilnadu

பாசிச பாஜக அரசு நீடித்தால்... ஆபத்தை விளக்கும் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்!

மதுரை மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், "பா.ஜ.க ஆட்சிக்கு வந்த போது 25 எதிர்க்கட்சி தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைத்தனர். ED,IT உள்ளிட்ட அமைப்புகளை வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் இவர்களை மிரட்டியது பா.ஜ.க. இதையடுத்து இந்த 25 எதிர்க்கட்சி தலைவர்களும் பா.ஜ.கவில் இணைந்தனர். அதன் பிறகு இவர்கள் மீது இருந்த ஊழல் குற்றச்சாட்டுகள் பா.ஜ.கவின் வாஷிங் மிஷின் மூலம் காணாமல் போய்விட்டது.

இதற்குச் சிறந்த உதாரணம் அஜித்பவார். இவர் மீது 70 ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டை பா.ஜ.க வைத்தது. இவரைத் துன்புறுத்தி தங்களது கட்சியில் இணைத்துக் கொண்டது. இந்த ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அஜித்பவாருக்குத்தான் மகாராஷ்டிராவில் துணை முதல்வர் பதவியை பா.ஜ.க வழங்கியுள்ளது.

ஜனநாயகத்தை பணநாயகம் வைத்து படுகொலை செய்த அரசு பா.ஜ.க அரசு. ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு இந்த அரசு நீடித்தால் சட்டம், மக்களாட்சி முறை என நாம் கண்முன் பார்க்கும் இந்த நாடு இப்போது இருப்பதுபோல் இருக்காது. ஏன் தமிழ்நாடு என்ற சொல்லே நீடிக்காது.

பாசிச அரசுக்கு அடிமையாக இருந்தவர்கள்தான் அ.தி.மு.கவினர். இப்போது கூட்டணியிலிருந்து பிரிந்து வந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் பா.ஜ.கவை விமர்சனம் செய்ய மறுக்கிறார்கள்.

இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். உங்கள் குழந்தைகளுக்காகவும், உங்கள் எதிர்காலத்திற்காகவும் நீங்கள் வாக்களிக்க வேண்டும். பாசிச ஆட்சியை வீழ்த்துவதற்காக வாக்களிக்க வேண்டும். தீய சத்தி நமக்கு வேண்டாம். ஒற்றுமை வேண்டும் எனவே மதுரை தொகுதியில் போட்டியிடும் சு.வெங்கடேசனுக்கு வாக்களியுங்கள்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ‘ஜி Pay’: QR Code-ஐ Scan செய்தால் ஒளிபரப்பாகும் மோடியின் ஊழல் - தமிழ்நாடு முழுதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!