Tamilnadu

”மோடி அடிக்கடி வந்தாலும் தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது” : அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் எட்டு நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்ததை ஆதரித்து குடியாத்தம், பிச்சனூர் தேரடி வீதியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கழகப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், "நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியிலும் அபார வெற்றி பெறுவோம். பா.ஜ.க. கூட்டணி கட்சியினருக்கு பிரசாரம் செய்ய பிரதமர் மோடி வருகிறார். மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர்.

பிரதமர் வருவதால் தமிழகத்தில், மக்களிடம் எந்த மாற்றமும் ஏற்படாது. தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணி அலை வீசுகிறது. வடமாநிலங்களிலும் இந்தியா கூட்டணி அலை வீசுகிறது. நிச்சயம் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

பா.ஜனதா தலைவர்கள் பலர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். வேட்டி கட்டியவர் கைகாட்டும் நபர்தான் பிரதமராக வந்து கொண்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கை காட்டுபவரே இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார்" என தெரிவித்துள்ளார்.

Also Read: “எந்த நன்மையும் செய்யாதவர் எப்படி வருத்தப்பட முடியும்? ”- மோடி அளித்த பேட்டி குறித்து முரசொலி தாக்கு !