Tamilnadu

குஷ்பூவை தொடர்ந்து நிர்மலா சீதாராமன்... நிவாரணத் தொகையை ‘பிச்சை’ என்றதால் சர்ச்சை - குவியும் கண்டனங்கள் !

திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்லபடுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மகளிருக்காக பல திட்டங்கள் திராவிட மாடல் ஆட்சி செயல்படுத்தியுள்ள நிலையில், இதற்கு நாடு முழுவதும் இருந்து வரவேற்பு இருந்து வருகிறது. அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும், மக்கள் நலனில் பார்த்து பார்த்து ஒவ்வொன்றும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. '

இந்த சூழலில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களிலும் எதிர்பாராத விதமாக கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதில் பலரது வீடுகளும் சேதமானதோடு, அன்றாட தேவைகளும் நீரோடு அடித்து செல்லப்பட்டது. தமிழ்நாடு அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏ-க்கள், தொண்டர்கள் என பலரும் இரவு பகல் தூங்காமல் மக்களுக்கு உதவி செய்து வந்தனர்.

வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை ஈடு செய்ய தமிழ்நாடு அரசு ஒன்றிய பாஜக அரசிடம் நிதி கேட்டு கோரிக்கை வைத்தது. ஆனால் கேட்ட உரிய நிதியை தற்போது வரை ஒன்றிய அரசு கொடுக்காமல் தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் வஞ்சித்து வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒன்றிய அரசு நிதி தர முடியாது என்ற பாணியில் பேசினார், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இவரது பேச்சுக்கு முதலமைச்சர், அமைச்சர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அதிக வரி செலுத்துவதாகவும், தங்கள் வரியையே தாங்கள் கேட்பதாகவும் கூறி, எங்கள் வரி எங்கே? என்று மக்களும் கேள்வி எழுப்பினர். அந்த சமயத்தில் கூட ஒன்றிய அரசின் நிதிக்கு காத்திருக்காமல் மக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையை தமிழ்நாடு அரசு வழங்கியது.

அதன்படி மக்களுக்கு ரூ.6 ஆயிரமும், ரூ.1000-மும் வழங்கப்பட்டது. அதோடு வீடு இடிந்த குடும்பத்திற்கும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த பணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக அமைந்துள்ள நிலையில், நிலையில், இதனை கொச்சைப்படுத்தும் விதமாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 'பிச்சை' என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.

நேற்று தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிர்மலா சீதாராமன், “வெள்ளம் வந்தால், வீடு இடிந்து விழுந்தால் ரூ.1000, ரூ.500 என கொடுக்கிறார்கள். இதுபோன்று செய்தால் நாடு முன்னேறாது. எப்போதும் இன்னொருவர் போடும் பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை” என்றார். இவரது பேச்சுக்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ஏற்கனவே பாஜக நிர்வாகியும், மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ, கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 'பிச்சை' என்று கொச்சைப்படுத்தி பேசியுள்ளது மாநிலம் முழுவதும் கண்டனங்களை எழுப்பியது. அதோடு அவரது உருவப்படத்தை எரித்தும், செருப்பால் அடித்தும் மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்த நிலையில், தற்போது ஒன்றிய அமைச்சரே இப்படி பேசியிருப்பது கண்டனங்களை எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சாத்தியமில்லாத 'ஒரே நாடு - ஒரே தேர்தல்' திட்டம் : தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் மூலம் வெளிவந்த உண்மை !