Tamilnadu

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி ரூ. 46 லட்சம் மோசடி செய்த தம்பதி : போலிஸில் சிக்கியது எப்படி?

திருவண்ணாமலை மாவட்டம் அப்துல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது உறவினரான மனோகரன் மற்றும் அவரது மனைவி கிரிஜா ஆகிய இருவரும் விஸ்வநாதனிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் ஆசையைத் தூண்டியுள்ளனர்.

இவர்கள் கூறியதை நம்பி 4 மாதங்களில் பல்வேறு தவணைகளில் ரூ. 66 லட்சம் வரை விஸ்வநாதன் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் சொன்னதுபோல் பணத்தை இரட்டிப்பாக்கித் தரவில்லை. இதையடுத்து இவர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

இதற்கு அவர்கள் ரூ. 20 லட்சம் பணத்தை மட்டும் திருப்பி கொடுத்துள்ளார். பின்னர் மீதி பணத்தைக் கேட்டபோது, அந்த பணம் வேறு ஒருவரிடம் முதலீடு செய்துள்ளதாகவும், அவர் ஏமாற்றி விட்டதாகவும் கூறியுள்ளனர்.

இதையடுத்து தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஸ்வநாதன் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் மனோகரன் மற்றும் அவரது மனைவி கிரிஜா ஆகியோரை கைது செய்தனர். மேலும் மனோகரன் தந்தை மதியழகனையும் போலிஸார் கைது செய்தனர்.

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூற தம்பதி ரூ. 46 லட்சம் மோசடி செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: குஜராத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு போதை மருந்து சப்ளை : குஜராத் சென்று தமிழ்நாடு போலீசார் அதிரடி !