Tamilnadu

சனாதனத்தை எதிர்த்த வைகுண்டரை பற்றி திரித்துப் பேசுவதா ? - ஆளுநருக்கு சாமிதோப்பு தலைமை பதி கண்டனம் !

அய்யா வைகுண்டரின் 192-வது அவதார தின விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி. "அதர்மத்தை அகற்றுவதற்காக கடவுள் நாராயணன் மனித அவதாரம் எடுத்துள்ளார்.

அந்த வரிசையில்தான் 192 ஆண்டுகளுக்கு முன்பு அய்யா வைகுண்டசாமியாக நாராயணன் அவதாரம் எடுத்தார். சனாதன தர்மத்தை கற்றுக்கொடுத்தார்" என்று கூறியிருந்தார். தனது வாழ்நாள் முழுவதும், சனாதனத்தை எதிர்த்த அய்யா வைகுண்டரை சனாதன தர்மத்தை கற்றுக்கொடுத்தவர் என்று ஆளுநர் கூறியதற்கு கடும் கண்டனம் எழுந்தது.

இந்த நிலையில், அய்யா வைகுண்டர் குறித்த ஆளுநரின் கருத்துக்கு சாமிதோப்பு தலைமை பதி அடிகளார் பாலபிரஜாபதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவதுபோல் வரலாற்றை திரித்து கவர்னர் பேசி உள்ளார்.ஆரிய கோட்பாட்டிற்கு அணி சேர்ப்பது போல் கவர்னர் பேசி உள்ளது வருந்தத்தக்கது. அய்யா வைகுண்டர் குறித்து கவர்னர் புரிந்து பேச வேண்டும். உருவ வழிபாடு, மொழி, பேதம், ஆண், பெண் பேதம், சாதிகள் இல்லை என பல கோட்பாடுகளை கூறியவர் அய்யா வைகுண்டர்.

அய்யா வைகுண்டர் சனாதனத்தை ஆதரித்தவர் என்று கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது. அய்யா வைகுண்டரை தனதாக்கி கொண்டு பட்டா போடுவதற்காக அவர்கள் பேசுவதை கண்டிக்கிறோம்.கவர்னர் வரலாற்றை தெரியாமல் பேசவில்லை, திரித்து பேசுகிறார்.

ஜாதியை வகுத்தவனை நீசன் என்று கூறுகிறார் ஐயா வைகுண்டர். அப்படிப்பட்டவரை சனாதனத்தை ஆதரித்தவர் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லா புராணங்களிலும் வரலாறு திரிக்கப்பட்டுள்ளது என்று கூறியவர் ஐயா வைகுண்டர். ஆனால் அவரை நாராயணன் அவதாரம் என்று ஆளுநர் கூறுகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது வேலையை மட்டும் பார்த்தால் போதும், ஆன்மீக பணிகளை மேற்கொள்ள வேண்டாம்" என்று கூறினார்.

Also Read: தண்ணீரில் வடை சுடும் பிரதமர்... 7 முறை வந்தும் மக்களை பார்க்காதவர்- மோடியை விமர்சித்த அமைச்சர் சேகர் பாபு