Tamilnadu

தேர்வுக்குப் பயந்து காட்டில் ஒளிந்து கொண்ட பள்ளி மாணவர்கள் : பெண் காவலர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி என்பது அதிகமான வனப்பகுதியைக் கொண்டது. கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட காபி காடு என்னும் இடத்தில் உள்ள மலைக் கிராமத்தில் பழங்குடியினர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் குழந்தைகள் பள்ளிப் படிப்பு பயில்வதற்கு அந்த கிராமத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் புளியம்பாறை என்ற இடத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று பத்தாம் வகுப்பு செயல்முறை தேர்வு நடைபெற்றது. இதில் 7 பழங்குடியின மாணவர்கள் பங்கேற்காமல் வனப்பகுதியில் ஒளிந்து கொண்டனர். இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் அழகரசி மற்றும் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் உஷா இருவரும் வனப்பகுதியில் நடந்தே சென்று ஏழு மாணவர்களையும் கண்டறிந்து மீட்டனர்.

பின்பு மாணவர்களுடன் அன்பாகப் பேசிய பள்ளிக்கு அழைத்து வந்து செயல்முறை தேர்வு எழுதவைத்தனர். இதையடுத்து மாணவர்களைத் தேர்வு எழுதவைத்த பெண் காவலர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Also Read: தமிழ்நாட்டில் 9 வெளிநாட்டு நாய்களின் இனப்பெருக்கத்துக்குத் தடை : ஏன்? என்ன காரணம்?