Tamilnadu

பார்க்கிங் கட்டணத்தில் இரண்டு புதுமையான முறைகள் - அறிமுகப்படுத்தியது சென்னை மெட்ரோ நிறுவனம் !

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சிங்கார சென்னை அட்டை மற்றும் ஸ்டோர் வேல்யூ பாஸ் QR மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்துதல் மற்றும் மெட்ரோ பயணிகள் குடும்பத்துடன் பயணிப்பதற்கான ஒற்றை QR பயணச்சீட்டை அறிமுகப்படுத்துகிறது

சிங்கார சென்னை அட்டை மற்றும் ஸ்டோர் வேல்யூ பாஸ் (SVP) QR மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் முறை மற்றும் மெட்ரோ பயணிகள் குடும்பத்துடன் பயணிப்பதற்கான ஒற்றை க்யூஆர் பயணச்சீட்டு பெறும் வசதியை இன்று (21.02.2024) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக், நந்தனம், அண்ணாசாலையில் அறிமுகப்படுத்தினார்.

அதனைத் பேசிய சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக், "சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ பயணிகளின் பயண அனுபவத்தை எளிதாக்கும் வகையில் பார்க்கிங் கட்டணத்தில் இரண்டு புதுமையான முறைகளை ஒருங்கிணைத்துள்ளது. மெட்ரோ பயணிகள் குடும்பத்துடன் பயணிப்பதற்கான ஒற்றை QR பயணச்சீட்டை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது.

சென்னை மெட்ரோ இரயில் பயணிகள் மெட்ரோ இரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் கட்டணத்தை 21.02.2024 முதல் சிங்கார சென்னை அட்டை மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மொபைல் ஆப்பில் ஸ்டோர் வேல்யூ பாஸ் (SVP) QR மூலம் செலுத்தலாம்.

சிங்கார சென்னை அட்டை (தேசிய பொது இயக்க அட்டை – NCMC) மூலம் பார்க்கிங் கட்டணத்தை செயல்படுத்தும் முதல் மெட்ரோ அமைப்பு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஆகும். பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் கணினி மேம்பாட்டு மையம் (CDAC) ஆகியவற்றின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோவில் ஒன்றாகப் பயணிக்கும் பயணிகளுக்கு வசதியாக, ஒற்றை QR குடும்ப பயணிச்சீட்டு பெறும் வசதியை இன்று முதல் (21.02.2024) அறிமுகப்படுத்துகிறது. ஒவ்வொரு பயணிக்கும் தனிப்பட்ட QR பயணச்சீட்டுகளை வழங்குவதற்கு பதிலாக, இப்போது பல பயணிகளுக்கு ஒரு QR பயணச்சீட்டை வழங்குகிறது. Ford Mobility உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த வசதி, 5 பயணிகள் வரையிலான குழுக்களை மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி கட்டண வசூல் அமைப்பு வழியாக தடையின்றி பயணிக்க அனுமதிக்கிறது, பயணச்சீட்டு வழங்கும் செயல்முறையை எளிதாக்குகிறது மற்றும் பயணிகளின் வசதியை அதிகரிக்கிறது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இந்த புதிய முறை மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும். டிஜிட்டல் முறைகளை ஊக்குவிக்கவும் பொதுமக்கள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்துடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம்"என்று கூறினார்.

Also Read: "மெட்ரோ பணிகளுக்காக ஒன்றிய அரசு ஒரு பைசா கூட தரவில்லை" - வானதிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் !