Tamilnadu

"3 மாதத்தில் போதை பொருட்களை விற்ற 3500 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் மா.சு !

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப். 12 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் நேற்று முன்தினம் “தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி” என 2024 -25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று 2024-25ம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.

அந்த விவாதத்தில் பேசிய பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தமிழகத்தில் போதை பொருள் உபயோகம் அதிகரித்து வருவதாகவும் அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு போதை பொருளை ஒழிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருவதாகவும், மாணவர்களை ஒருங்கிணைத்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்வும் நடைபெற்றதாகவும், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இன்னும் போதைப்பொருட்கள் செயல்பாட்டில் உள்ளதால் காய்கறி போன்ற பொருட்களுடன் போதை பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா என்பது குறித்து பரிசோதனை செய்து வருவதாகவும் கூறினார்.

மேலும், போதைப் பொருளுக்கு எதிராக அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுத்து வருகிறது வருவதாக கூறிய அவர், போதை பொருள் விற்பவர்களை கண்டறிந்து காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக கடந்த 3 மாதங்களில் 3500 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.அதேபோல், தமிழ்நாட்டில் கஞ்சாவை பொறுத்தவரையில் 0 cultivation என்ற அடிப்படையில் முழு அளவில் கட்டுப்படுத்த முதலமைச்சர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் திட்டவட்டமாக கூறினார்.