Tamilnadu

“தமிழ்நாட்டுக்கு மோடி செய்தது என்ன? - இதை பேசுவதற்கு பாஜகவிற்கு தைரியம் இருக்கா?” : ஆர்.எஸ்.பாரதி சாடல்!

கடந்த பத்தாண்டு காலத்தில் ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகளையும், ஒன்றிய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து தற்பொழுது நாடகமாடும் அடிமை அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்கள் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் திமுக சார்பில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல், பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் பாராளுமனற பரப்புரை கூட்டம் முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துக்கொண்டார். பரப்புரையில் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், “பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் மோடி துரோகம் இழைத்துள்ளார்.கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் தமிழகத்திற்கு மோடி செய்தது என்ன? வளர்ச்சி என்ன இருக்கிறது என்று பேசுவதற்கு பாஜகவில் யாருக்கும் தைரியம் இல்லை.

தெரு தெருவாக பொய் பேசுவத்றகாகவே பாஜகவில் அண்ணாமலை உள்ளார். அம்பானியின் வளர்ச்சிக்காக மட்டுமே மோடி செயல்படுகிறார். மோடி காலையில், மாலையில் என்று வேஷம் போடுவார். ஒவ்வொரு மாநிலத்திற்கு சென்றால், அதற்கு ஏற்றவாரு ஆடை அணிந்து மோடி ஏமாற்றுகிறார்.

டெல்லியில் சர்வாதிகார ஆட்சியை மோடி செய்து வருகிறார். 2016ல் 570 கோடி பணம் பிடிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்டது. அது யாருடையது என்று விசாரனை செய்ய சி.பி.ஐ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டு, 8 வருடங்கள் ஆகிறது. ஆனால், இதுவரை யாருடையது என வெளியிடவில்லை என தெரிவித்தார்.

எதிர்கட்சிக்காரர்கள் வீட்டிற்கு அமலாக்கதுறையை அனுப்பும் மோடி அரசு பணம் பிடிப்பட்டது குறித்து ஏன் வாய் திறக்கவில்லை. இந்த பணம் பாஜகவின் மோடிக்கு சொந்தமானதாக இருக்கும் என சந்தேகம் உள்ளது. துரதிஷ்டவசமாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த எடப்பாடி பழனிச்சாமி மறைந்த அதிமுக கட்சியை சின்னாபின்னமாகி விட்டார். ” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “தமிழ்நாட்டிற்கு 29 பைசா... ஆனால் உ.பி-க்கு வட்டியுடன் இரண்டு பைசா?”: மோடி அரசை விளாசி தள்ளிய கனிமொழி MP!