Tamilnadu
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் : உரையை வாசிக்க மறுப்பு - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆளுநர் !
நடப்பாண்டில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டதொடர் வரும் 12-ம் தேதி தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு அண்மையில் அறிவித்திருந்தார். அதன்படி இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவிருந்தது. அந்த வகையில் காலை 10 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கி ஆளுநரிடம் அவரது உரை கொடுக்கப்பட்டது.
ஆனால் பல்வேறு உப்புசப்பில்லாத காரணங்களை கூறி ஆளுநர் தனது உரையை வாசிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். குறிப்பாக கூட்டதொடர் தொடங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்ற காரணத்தை கூறி உரையை வாசிக்காமல் புறக்கணித்துள்ளார். வழக்கமாக தமிழ்நாட்டில் எந்த அரசு சார்ந்த நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படாது.
மாறாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கும். அதேபோல் நிகழ்ச்சி முடியும்போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிறைவடையும். ஆண்டுதோறும் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூட இதுவே மரபாக இருந்து வந்தது. இந்த சூழலில் தற்போது இதனை ஒரு காரணமாக சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு கொடுத்த உரையை ஆளுநர் வாசிக்காமல் புறக்கணித்துள்ளார்.
மேலும் தமிழ்நாடு அரசின் சாதனைகளும் அந்த உரையில் இடம்பெற்றிருந்ததாலும், அதில் தார்மீக ரீதியாக தனக்கு உடன்பாடில்லை என்பதாலும் வாசிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த நடவடிக்கையானது தற்போது கண்டனங்களை வலுத்து வருகிறது. ஏனெனில் இதுபோன்று ஆளுநர் செய்வது இது முதல்முறையல்ல.
கடந்த ஆண்டு கூட்டத்தொடரின்போது கூட, ஆளுநர் உரையில் இருந்த தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்கள் பெயரை வாசிக்க மறுத்தார். மேலும் பேரவை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே எதிர்க்கட்சி போல் வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து ஆளுநரின் செயல் தமிழ்நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் எதிராகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்துள்ளது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்த ஆண்டில் கேரளா சட்டப்பேரவையில் கூட, அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான், தனது உரையை பாதியில் முடித்து சர்ச்சைக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?