Tamilnadu

சென்னையில் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு : தமிழ்நாடு அரசு அறிவிப்பு... முழு விவரம் என்ன ?



முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையில் 1999-இல் 'தமிழ்இணையம்99' மாநாடு வெற்றிகரமாக நடத்திமுடிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் தமிழ்நாடு அரசு தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் 'கணித்தமிழ்24' மாநாட்டினை நடத்தவுள்ளது.

வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் தமிழின் நிலை குறித்து ஆராய்தல், விவாதித்தல், புதிய சிந்தனைகளை உருவாக்குதல், இளம் திறமைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட இலக்குகளோடு இந்த பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு நடத்திட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

தொழில்நுட்பத் துறையில் தமிழைப் பயன்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் தமிழ் இணையக் கல்விக்கழகம், இந்தப் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாட்டை ஒருங்கிணைக்கும். புது யுகத்திற்கு ஏற்றாற்போல் தமிழ் மொழியும் புத்தொளி பெற்று வளர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது. ஆங்கிலத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுவரும் Natural Language Processing Tools (NLPT), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இயந்திரவழிக் கற்றல் (Machine Learning), Machine Translation (MT), Sentimental Analysis (SA), Large Language Model (LLM), Automatic Speech Recognition (ASR) போன்றவற்றைத் தமிழில் உருவாக்கும் முயற்சியும் இந்த மாநாட்டின் இலக்காக இருக்கும்.

இந்தப் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு 2024 பிப்ரவரி 8, 9, 10 ஆகிய நாட்களில் சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நடத்திய 'தமிழ்இணையம்99' மாநாடு நடைபெற்ற அதே நாளில் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு (கணித்தமிழ்24) கலைஞர் நூற்றாண்டில் நடைபெறவிருப்பது சிறப்பான ஒன்றாகும். தமிழ்நாட்டிலும், இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் தமிழுக்காகப் பங்களித்துவரும் அறிஞர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் தமிழ் ஆர்வலர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள். மேலும் மாநாடு தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.kanitamil.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

'தமிழ்இணையம்99' மாநாட்டின் விளைவாக உருவானதுதான் தமிழ் இணையக் கல்விக்கழகம். உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இணைய வழியில் தமிழ் கற்றுக்கொடுத்தல், தமிழ் நூல்களையும் இதழ்களையும் அரிய ஆவணங்களையும் மின்னுருவாக்கம் செய்தல், கணினித் தமிழை மேம்படுத்துதல் ஆகியவை தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் முதன்மையான பணிகளாகும். மேலும், மாநாட்டில் பங்குபெற்ற வல்லுநர்களின் வழிகாட்டுதலோடு 'தமிழ்99 விசைப்பலகை' உருவாக்கப்பட்டு, அரசால் அங்கீகரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. தமிழில் மென்பொருட்களை உருவாக்குவது தொடர்பான செயல்களைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.

இந்நிலையில், 'தமிழ்இணையம்99' மாநாட்டுக்குப் பிறகான காலகட்டத்தில் தொழில்நுட்பம் அடைந்திருக்கும் வளர்ச்சி அபரிமிதமானது. செயற்கை நுண்ணறிவு குறித்து கடந்த நூற்றாண்டின் இறுதியிலேயே நாம் பேசத் தொடங்கிவிட்டாலும் அண்மைக் காலத்தில்தான் அது முழுவீச்சில் களம் கண்டிருக்கிறது. எனவே, வளர்ந்துவரும் இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் தமிழுக்கான இடத்தினை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் வழியாக, தொழில்நுட்பத் துறையில் தமிழ் மொழியின் பயன்பாடு அதிகரிப்பதற்கான சூழலை ஏற்படுத்த இயலும். புதிய தலைமுறையை இதன் பக்கம் திருப்ப இயலும்.

Also Read: "கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும்" - நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்த திமுக !