Tamilnadu

"ஆளுநர்கள் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குவதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை" - சபாநாயகர் அப்பாவு !

மும்பையில் நடைபெற்ற பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டார். பின்னர் அந்த மாநாட்டில் பேசிய அவர், "ஜனநாயக அமைப்புகளின்மீது மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த நாடாளுமன்றம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்கள் ஆகியவற்றில் மாண்பு மற்றும் நல்லொழுக்கம் பேண வேண்டியதன் அவசியம். இப்போது இந்தியாவில் இருக்கின்ற ஜனநாயக முறைக்கு முதல் தொடக்கப்புள்ளி சோழர் ஆட்சிக்கால குடவோலை முறையாகும். இதற்குச் சான்றாக, தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் கல்வெட்டை குறிப்பிட்டுச் சொல்லலாம். பத்து தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டு, கிராம சபை தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவ்வாறு, குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம சபை தலைவர்களை அவர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் நீக்கும் அதிகாரமும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனுடைய தொடர்ச்சிதான் இந்திய ஜனநாயகம்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட அமைப்புதான் குடியாட்சி முறை இந்திய ஜனநாயகம் ஆகும். கூட்டாட்சி முறை அமைப்பைக் கொண்டதுதான் நம்முடைய ஜனநாயக அமைப்பு. இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் என்பவை, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள், நிர்வாகத் துறை, நீதித் துறை மற்றும் பத்திரிகைத் துறை ஆகியவை ஆகும். இந்த நான்கு தூண்களும் வெவ்வேறு அமைப்புகளாக இருந்தாலும், இணைந்து செயல்பட்டால்தான் மக்களுக்கு நன்மைகள் ஏற்படும். குறிப்பாக, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மக்களுடைய பிரச்சினைகள் குறித்து கொண்டு வரப்படுகின்ற தீர்மானங்கள், விவாதிக்கப்பட்டு, சட்டமாக்கி சரியான முறையில் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை நீதித் துறை கண்காணிக்கிறது. நிர்வாகத் துறை சரியாக செயல்படுகின்றதா என்பதை பத்திரிக்கைத் துறை கண்காணிக்கிறது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் கொண்டுவரப்படும் மசோத்தாக்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் பிரதிநிதிகளால் முழுமையாக விவாதிக்க அனுமதிப்பதுதான் ஜனநாயகத்தின் மாண்பு ஆகும். மேலும், வினாக்கள்-விடைகள் நேரம், நேரமில்லா நேரத்தில் உறுப்பினர்களை முழுமையாக பேச அனுமதிக்க வேண்டும். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் மாண்பைக் கெடுக்கும் வகையில் சில நேரங்களில் சில மக்கள் பிரதிநிதிகளின் நடவடிக்கைகள் இருக்கும்போது பேரவைத் தலைவர்கள் அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பது சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள், "I will refer to IPC only as IPC even after it gets replaced with new law named in Hindi" என்று குறிப்பிட்டுள்ளார்.

2006-2011 ஆண்டு தமிழ்நாட்டில் தலைவர் கலைஞர் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த காலக்கட்டத்தின்போது, சட்டன்றத்தின் நடந்த நிகழ்வு ஒன்றை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அப்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர் ஓ. பன்னீர் செல்வம். அவையில் நடந்த ஒரு நிகழ்வுக்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் அவையிலிருந்து பேரவைத் தலைவர் வெளியேற்றி விடுவார். அவைக்கு வருகை தந்தவுடன் அதனை அறிந்த தலைவர் கலைஞர், அவர்கள் அனைவரையும் மீண்டும் அவைக்கு அழைத்து வருமாறு தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தெரிவித்து, மீண்டும் அவர்களை அவைக்கு அழைத்து வந்து அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளச் செய்தவர்தான் தலைவர் கலைஞர் அவர்கள். இதுதான் ஜனநயாக மாண்பு.

தமிழ்நாட்டில் தற்போது, 132 ஆளுங்கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 101 பேரும் உள்ளனர். கடந்த இரண்டரை ஆண்டுகளில், எதிர்க்கட்சி உறுப்பிர்களுக்கு 107 மணி நேரம் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு 78 மணி நேரம்தான் பேச அனுமதிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களுடைய கருத்துகள் அவையில் அதிகளவில் பதிவு செய்யப்பட வேண்டுமென்பதுதான் முதலமைச்சரின் எண்ணமாகும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளால் நிறைவேற்றப்படுகின்ற சட்டமுன்வடிவுகள் அனைத்திற்கும் குடியரசு தலைவர் ஒரிரு நாட்களில் அனுமதி அளித்து விடுகிறார். ஆனால், பல மாநிலங்களில் ஆளுநர்களால் பல சட்டமுன்வடிவுகள் பல மாதங்களாக, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்பட்டு, உச்ச நீதிமன்றம் வரை பல மாநில அரசுகள் சென்றுள்ளன.

இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில்தான், நான், சிம்லாவில் நடைபெற்ற பேரவைத் தலைவர் மாநாட்டில், "ஆளுநர்கள், சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு கால அவகாசம் முறையாக நிர்ணயிக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தினேன்". அதையே தற்போதும், நான் வலியுறுத்த விரும்புகிறேன். அதோடு, கடந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை ஆற்ற வந்த ஆளுநர் , ஆளுநர் உரையில் பல பகுதிகளைச் சேர்த்தும், நீக்கியும் வாசித்து தமிழக சட்டமன்ற மாண்பை இழிவுப்படுத்தியை நினைவுகூர விரும்புகிறேன். தற்போது, கேரள மாநிலத்தினுடைய ஆளுநர் , ஆளுநர் உரையின் கடைசிப் பக்கத்தை மட்டும் அவையில் வாசித்து, ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கியதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஜனநாயக மாண்பை, ஜனநாயக முறையில், நாட்டு மக்களும், ஆளும் கட்சிகளும் பின்பற்றினால்தான் நம்முடைய நாட்டிற்கு பெருமை சேர்க்க முடியும்" என்று கூறினார்.

Also Read: ”இந்தியாவை காக்கும் போராட்டத்தில் தமிழ்நாடு, கேரளா” : சீத்தாராம் யெச்சூரி பேச்சு!