Tamilnadu

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி 5 வருஷம் ஆச்சு - மதுரை எய்ம்ஸ் என்னாச்சு?

ஒன்றிய பாஜக அரசு கடந்த 2015ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்தில் “எய்ம்ஸ் மருத்துவமனை” அமைக்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாடு அரசிடமிருந்து 224.24 ஏக்கர் நிலம் ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. மதுரை மாவட்டம் தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

பின்னர் எந்த பணியையும் மேற்கொள்ளாத ஒன்றிய பாஜக அரசு 3 ஆண்டுகளுக்கு பிறகு, 5 கோடி ரூபாயில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டியது. உரிய நேரத்தில் கட்டுமான பணி தொடங்காமல் தாமதம் செய்ததால் 713 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக நிபுனர்கள் விமர்சித்து வந்தனர்.

அதேவேளையில், தி.மு.க. அரசு அமைந்த பிறகு உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிட வேண்டுமென முதல்வர் அவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டப்படவில்லை என்றாலும், 2021 ஆம் ஆண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, மாணவர் சேர்க்கை நடைபெற்று ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

மதுரை தோப்பூரில் சுற்றுச்சுவரை கட்டியதை தவிர ஒன்றிய அரசு வேறு எந்தப் பணியையும் தொடங்கவில்லை. மதுரை எய்ம்ஸ் பணிகள் துவங்கப்பட்டால் 45 மாதங்களில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 5 வருடங்கள் முழுமையாக நிறைவடைந்துவிட்டன. ஆனால் நாட்டிய செங்கல் அப்படியே இருக்கிறதே தவிர கட்டுமானப்பணிகள் இன்னும் தொடங்கிய பாடில்லை.

அதாவது 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வர வேண்டும். ஆனால் இப்போதே 5 வருடங்கள் முடிவடைந்து விட்டன. இன்னும் பணிகள் தொடங்கக் கூடிய அறிகுறிகளைக் கூட காணோம். இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவு பெறுகிறது. இரண்டாவது செங்கல்லை எடுத்துவைக்க இன்று எந்த அமைச்சரையும் அனுப்பிவைக்காத ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கிறேன். எங்கள் எய்ம்ஸ் எங்கே?” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: மதுரை AIIMS: “எப்போ கேட்டாலும் பணி எப்போ தொடங்கும்னு மட்டும் சொல்ல மாட்றாங்க” - சு.வெங்கடேசன் MP தாக்கு !