Tamilnadu

CIBF 2024 : “752 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கடந்த 16-ம் தேதி சர்வதேச புத்தகக் காட்சி தொடங்கியது. 3 நாட்கள் வரை நடைபெற்ற இந்த புத்தக காட்சியானது இன்றுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு பார்வையிட்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகம் மையத்தில் நடைபெறும் மூன்றாவது மிகப்பெரிய நிகழ்ச்சி இந்த சர்வதேச புத்தகக் காட்சி. ஆண்டின் துவக்கத்தில் அனைவரும் புத்தாண்டு, பொங்கல் என பண்டிகைகள் கொண்டாடும் நேரத்தில், எழுத்தையும் வாசிப்பையும் கொண்டாடும் ஒரு மாநகரம் என்றால் அது சென்னைதான்; ஒரு இனமென்றால் அது தமிழினம்தான்.

தமிழ் நூல்களை மொழிபெயர்ப்பு செய்ய தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னையின் ஒரு அடையாளமாக திகழ்கிறது. கடந்த ஆண்டு நடந்த சர்வதேச புத்தகக் காட்சியில் 365 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஆண்டு 752 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுதாகியுள்ளது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் இருமடங்கு அதிகம்.

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவில் திமுக இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நூலகம் அமைக்க திட்டமிடப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் 15 தொகுதிகளில் நூலகங்கள் அமைக்கப்பட்டு, அதில் 20,000 புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் நடமாடும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய புத்தகம்தான் நாளைய வரலாறு சொல்லும்.” என்றார்.

Also Read: இந்தியாவிலேயே முதல் முறை... “மகுடம் சூடப்போகும் பன்னாட்டு மருத்துவ மாநாடு” - அமைச்சர் மா.சு நெகிழ்ச்சி !