Tamilnadu

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையை சிதைத்துவிட்டு சென்ற அதிமுக: சீர்தூக்கிய திராவிட மாடல் அரசு !

இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் சில போக்குவரத்து சங்கங்களால் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையை அ.தி.மு.க அரசு எவ்வாறு சிதைத்தது என்பது குறித்தும், அதனை தி.மு.க அரசு எவ்வாறு சீர்தூக்கியது என்பது குறித்தும், சமூக வலைத்தளத்தில் ஒரு கட்டுரை பரவ வருகிறது. அதன் விவரம்,

பேருந்து பயணம் என்பது ஏழை, நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த காலத்தில் அனைவரும் பேருந்தில் பயணிக்க வழிவகை செய்தது கலைஞர்தான். போக்குவரத்துத் துறை என்ற துறையையே உருவாக்கி அதை தேசியமயமாக்கியவர் கலைஞர். இன்றும் வட இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் சிறப்பான பயணத்தை நம் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை வழங்கி வருகிறது.

மகளிருக்கு விடியல் இலவச பயணம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் என கல்விக்காகவும் மகளிர் முன்னேற்றத்துக்காகவும் போக்குவரத்துத் துறையை பயன்படுத்திக்கொள்ளும் திராவிட மாடல் அரசு போக்குவரத்துத் துறையை லாப நோக்கில் என்றுமே பார்த்தது இல்லை.

கடந்த அ.தி.மு.க. ஆட்சி, தமது காலத்தில் பதினான்காவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உரிய காலத்தில் முடிக்காமல், தொழிலாளர்களை நிர்கதியாக நிற்க வைத்து, எந்த கோரிக்கைகளும் அ.தி.மு.க அரசு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்று கொண்டு, வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

மிக முக்கியமாக, அ.தி.மு.க ஆட்சி காலத்தில் சீர்குலைக்கப்பட்ட ஊதிய விகிதம், மீண்டும் சீரமைக்கப்பட்டு "பே மேட்ரிஸ்" தனித்தனி ஊதிய விகிதம், 2.57 காரணி வழங்கப்பட்டு வருகிறது. ஊதியமும் 5 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தப்பட்டது. இது அத்தனையும் எந்த போராட்டமும் நடத்தாமல், எந்த ஒடுக்கு முறையையும் சந்திக்காமல் தொழிலாளர்களுக்கு கிடைத்தவை. கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை எவ்வளவு சீரழிக்கப்பட்டது என்பது எல்லோரும் அறிந்தது. மகளிர் கட்டணமில்லா பயணத்திற்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.2800 கோடி ஒதுக்கி, டீசல் மானியமாக ரூ.2000 கோடியும், மாணவர் இலவச பஸ் பயணத்திற்காக ரூ.1500 கோடியும் ஒதுக்கீடு செய்தவர் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

அரசாணை 36-ஐ பிறப்பித்து போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் மூலம் போக்குவரத்து கழகங்கள் சிறப்பாக செயல்பட காரணமானவர் நம் முதல்வர். புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கி, புதிய பணியாளர்கள் நியமனத்திற்கு அனுமதி அளித்து, இத்துறை சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுத்துள்ளவர் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தீபாவளி போனஸ் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் குறைத்து வழங்கப்பட்டதை, யாரும் கோரிக்கை வைக்காமலேயே மீண்டும் 20 சதவிகிதமாக உயர்த்தி ரூ.16,800/- வழங்கியவர் நம்முடைய முதல்வர் தான். இதற்கும் எந்த போராட்டமும் நடத்தப்படவில்லை. மக்கள் மனமறிந்து செயல்படுவது போலவே, தொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுபவர்தான் நம் முதல்வர்.

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு, வாரிசு அடிப்படையிலான பணி போன்றவைகளை இந்த அரசு நிறைவேற்றி தந்துள்ளது. பணியில் உள்ள தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்றும், தமிழர் திருநாளாம் பொங்கல் விடுமுறைக்குப் பின்பு தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பிரச்சினைகளும் தீர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உறுதி அளித்துள்ளார்.

இருந்தும் கூட பொங்கல் விடுமுறை நெருங்கும் வேளையில் வேலை நிறுத்தம் செய்தால் மக்கள் பாதிக்கப்பட்டு அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்ற உள் நோக்கில் அதிமுக தொழிற்சங்கம் இந்த போராட்ட த்தை கையில் எடுத்துள்ளது. இந்த சதியையும் நாம் வென்று காட்டுவோம்.

Also Read: 6 லட்சம் கோடி முதலீடு.. 26 லட்சம் வேலைவாய்ப்புகள்.. - முதமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு!