Tamilnadu

“தலைவர் மீதும் எனது தாயார் மீதும் பற்று வைத்த நல்ல மனிதர் விஜயகாந்த்” : நினைவலைகளை பகிர்ந்த கனிமொழி MP

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டட் குடும்பங்களுக்கு, 6,000 ரூபாய் நிவாரணம் பணமாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. நிவாரண நிதி வழங்கும் பணியை இன்று (29/12/2023) தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண ரூ.6,000 வழங்கி, துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி, “புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் மறைவு என்பது தமிழக அரசியலுக்கு மட்டுமில்லாமல், அவரைத் தெரிந்த எல்லோருக்கும் மிகப்பெரிய இழப்பு. எந்த உயரத்தில் இருந்தாலும் தான் சாமானிய மனிதன் என்பதை எந்த காலகட்டத்திலும் மறந்திடாத மாமனிதர் அவர்.

எப்பொழுதும் மக்கள் மீதும் எளியவர்கள் மீதும் அக்கறை கொண்டவர். ஒரு காலகட்டத்தில் உதவியவர்களை மறக்காமல் அவர்களோடு என்று இருக்கக்கூடியவர் தான் புரட்சி கலைஞர் விஜயகாந்த். அவரது அரசியல் பயணம் என்பது கூட மக்கள் மீது இருக்கக்கூடிய திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் கூட தமிழ் உணர்வு, திராவிட உணர்வு மக்கள் மீது வைத்திருக்கக் கூடிய அன்பு இதைச் சுற்றித்தான் அவரது திரைப்படமும் இதையே மைய கருத்தாக கொண்டு இருந்தது என்றார்.

அவருடைய வாழ்க்கையும் தமிழ் இனம் என்பதைத்தான் பற்றி கொண்டு இருந்தது அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர், அவரை நாம் இன்று இழந்து இருக்கிறோம். அவரோடு பழகக் கூடிய வாய்ப்பு எங்கள் குடும்பத்தாரோடு பல சந்தர்ப்பங்களில் இருந்திருக்கிறது என்றார். தலைவர் மீதும் எனது தாயார் மீதும் பற்று வைத்திருக்க கூடிய நல்ல மனிதர் அவர், அவருடைய இழப்பு என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

வேலை தேடி வரக்கூடிய யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு நிமிடம் கூட சிந்திக்காமல் தன்னுடைய அலுவலகத்திலேயே 75 பேருக்கு ஒரு நிமிடத்தில் வேலை கொடுக்கக்கூடிய அவ்வளவு இளகிய மனதிற்கு சொந்தக்காரர் அவர், அவரது இழப்பு என்பது அவரை தெரிந்தவர்கள் அனைவருக்கும் நேரடியாக தான் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ”நட்புக்கு இலக்கணம் கேப்டன்” : விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!