Tamilnadu

7 இடங்கள் - 20 மணி நேரம் நடந்த சோதனை : துணை வேந்தர் இல்லத்திலிருந்து மடிக்கணினியை கைப்பற்றிய போலிஸ்!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் 120-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கடந்த மூன்று ஆண்டுகளாக ஜெகநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் ஜெகநாதனின் பதவிக் காலத்தில் பல்வேறு முறைகேடுகள் ஊழல் குற்றச்சாட்டுகள் என தொடர்ச்சியான புகார்கள் எழுந்து வந்தது.

இந்த சூழலில் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள ஜெகநாதன், பூட்டர் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, பல்கலைக்கழகத்தில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிற் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் என்பவர் அரசு அனுமதி பெற்று சேலம் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அதிரடியாகச் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திலிருந்த துணை வேந்தர் ஜெகநாதனை டிச.26ம் தேதி போலிஸார் கைது செய்தனர். பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலு மற்றும் கணினி அறிவியல் துறை இணை பேராசிரியர் சதீஷ் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையடுத்து நேற்று மாலையிலிருந்து துணைவேந்தர் இல்லம், அலுவலகம், பல்கலைக்கழக பதிவாளர் இல்லம் அலுவலகம் உள்ளிட்ட ஏழு இடங்களில் போலிஸார் சோதனை நடத்தி வந்தனர். கிட்டத்தட்டட 20 மணி நேரத்திற்கு மேல் நடந்துவந்த இச்சோதனை நிறைவு பெற்றுள்ளது.

இந்த சோதனையில் துணை வேந்தர் இல்லம் மற்றும் அலுவலகத்திலிருந்து லேப்டாப்கள், ஹார்ட் டிஸ்க் மற்றும் பென்டிரைவ் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் போலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும் சோதனை நடைபெற்ற இடங்களில் உள்ள கணினிகளை ஆய்வு செய்யத் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு அதிலுள்ள பதிவுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Also Read: மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்தவர் விஜயகாந்த் : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!